இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 9,926 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது, இது கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் 9,246 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் டிசிஎஸ் வருவாய் 15.75 சதவீதம் அதிகரித்து 50,591 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய், லாபம் அதிகரித்தாலும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகளவில் வெளியேறுவது பெரும் பிரச்சனையாக முதலீட்டாளர்கள் பார்க்கின்றனர். ஆனால் டிசிஎஸ் அசராமல் உள்ளது.
ஐடி மற்றும் டெக் துறை
கொரோனா தொற்றுக்குப் பின்பு பெரும்பாலான துறைகள் அதிகப்படியான டிஜிட்டல் சேவைகளைத் தனது வர்த்தகத்தில் கொண்டு வர முடிவெடுத்துள்ளது, இதேபோல் கிளவுட் சேவையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தால் ஐடி மற்றும் டெக் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம்
இதனால் சந்தையில் இருக்கும் முன்னணி டெக் சேவை நிறுவனங்கள் எப்படியாவது ஊழியர்களைக் கைப்பற்றிட வேண்டும் என்பதற்காக அதிகப்படியான சம்பளத்தைக் கொடுத்து வருகிறது. இதனால் அனைத்து நிறுவனத்தில் இருந்தும் ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதேபோல் அதிகச் சம்பளம் கொடுத்துத் தான் புதிய ஊழியர்களைக் கைப்பற்ற வேண்டும் என நிலை உருவாகியிருக்கும் காரணத்தால் நிறுவனத்தின் லாப அளவீடுகளும் பாதிக்கப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனம்
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் (Attrition Rate) ஜனவரி - மார்ச் காலாண்டில் 17.4 சதவீதமாக உள்ளது. 2021ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 7.2 சதவீதமாக இருந்த அட்ரிஷன் ரேட் தற்போது 17.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டிசிஎஸ் நிர்வாகம் அடுத்தச் சில காலாண்டுகளுக்குப் பின்பு தான் அட்ரிஷன் விகிதம் குறையும் எனத் தெரிவித்துள்ளது.
ராஜேஷ் கோபிநாதன்
அடுத்த 2 காலாண்டுகளுக்கு ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் அதிகமாகத் தான் இருக்கும், ஆனால் மாதாந்திர அளவீட்டை பார்க்கும் ஊழியர்கள் வெளியேறும் அளவீடு தணிந்துள்ளது. இதனால் விரைவில் அட்ரிஷன் அளவீடு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
செலவுகள் அதிகரிப்பு
ஊழியர்களுக்கான உடல்நலக் காப்பீட்டுப் பலன்கள், போக்குவரத்து வசதிகள், வீட்டில் இருந்து பணியாற்றும் செலவுகள் மற்றும் ஒரு பணியாளரைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பணியமர்த்துவதற்கும் கல்வி சேவை உதவிகள், பணியமர்த்தல் ஆகியவற்றின் செலவுகள் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் FY22 இல் 15,740 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
1.03 லட்சம் பிரஷ்ஷர்
டிசிஎஸ் ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுக்கும் விதமாகச் சிறப்பான சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை அளிக்க முடிவு செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அட்ரிஷன் அளவை குறைக்கவும், புதிய திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் என்பதற்காக டிசிஎஸ் 2022ஆம் நிதியாண்டில் சுமார் 1.03 லட்சம் பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. மார்ச் காலாண்டில் மட்டும் 35,209 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications