சந்தை மதிப்பீட்டு அளவீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாகவும், உலகின் 2வது மிகப்பெரிய ஐடி நிறுவனமாகவும் திகழும் டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் நிறுவனத்தில் தற்போது 4,88,650 ஊழியர்கள் இந்தியாவில் இருந்தும், உலக நாடுகளில் இருக்கும் அலுவலகங்களில் இருந்தும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிறுவனம் இந்திய நிறுவனங்களை விடவும் உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகப்படியான சேவைகளை அறிவித்துத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து உள்ளது. டிசிஎஸ் வங்கி முதல் ஹெல்த்கேர் துறை வரையில் அனைத்து துறைகளுக்கும் ஐடி சேவை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதைவிட முக்கியமாக டாடா குழுமத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை டிசிஎஸ் அளிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு பெரிய நிறுவனத்தின் சிஇஓ சம்பளம் என்ன தெரியுமா..?!
சம்பளத்தில் தடாலடி வளர்ச்சி
சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பின் டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாகக் கடந்த 5 வருடங்களாக ராஜேஷ் கோபிநாதன் இருந்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் இவரது சம்பளம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டுத் தடாலடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன்
இந்நிலையில் ராஜேஷ் கோபிநாதன் அவர்களின், மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டுக்கான மொத்த சம்பளம் குறித்துத் தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்தச் செய்தி தான் தற்போது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
ரூபாய் சம்பளம்
ராஜேஷ் கோபிநாதன் 2020-21ஆம் நிதியாண்டுக்கு அடிப்படை சம்பளமாக 1.27 கோடி ரூபாயும், பெனிபிட்ஸ் ஆகியவற்றின் கீழ் 2 கோடி ரூபாயும், நிறுவன லாபத்தில் கமிஷன் தொகையாக 17 கோடி ரூபாயை பெற்றுள்ளார். இதன் மூலம் இவரது மொத்த சம்பளம் 54 சதவீத உயர்வில் 20 கோடி ரூபாயைத் தொட்டு உள்ளது.
326.8 மடங்கு அதிக சம்பளம்
டிசிஎஸ் நிறுவன ஊழியர்களின் சராசரி சம்பள அளவீட்டை ஒப்பிடுகையில் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் அவர்கள் சுமார் 326.8 மடங்கு அதிகப் பெறுகிறார். அதாவது சாமானிய ஊழியர்களுக்கும், தலைவருக்கும் மிகப்பெரிய சம்பள வித்தியாசம் உள்ளது.
சம்பள வித்தியாசம்
ஒரு நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், தலைவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தின் இடைவெளி ஒவ்வொரு ஆண்டு அதிகரித்து வருவதைத் தவிரக் குறையவில்லை. கடந்த 214.6 மடங்காக இருந்த சிஇஓ ராஜேஷ் கோபிநாதனின் சம்பளம் இந்த ஆண்டு நிலையில் தற்போது 326.8 மடங்காக உயர்ந்துள்ளது.
புதிய ஊழியர்களின் எண்ணிக்கை
இந்த வித்தியாசம் பெரிய நிறுவனங்களில் தொடர்ந்து இருக்கும், இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு ஆண்டுப் புதிய ஊழியர்களின் சேர்க்க அதிகரித்து வரும் போதும், வர்த்தகம் உயரும் போது இதன் அளவீடுகள் குறைவது கடினம் தான்.
டிசிஎஸ் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு
டிசிஎஸ் கடந்த ஆண்டுக் கொரோனா காரணமாகச் சம்பள உயர்வைத் தாமதமாகக் கொடுத்தும் வெறும் 6 மாத இடைவேளையில் இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வையும், அதாவது 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வை அளித்துள்ளது. மேலும் பல உயர் அதிகாரிகளுக்கு 6 முதல் 8 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது எப்போதும் அளிக்கப்படும் அளவீட்டை விடவும் அதிகமானது.
40,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மேலும் நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் இந்த ஆண்டுச் சுமார் 40,000 பட்டம் பெற்ற மாணவர்களை நேரடியாகப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 5 லட்சம் என்ற மாபெரும் இலக்கை தாண்டும் என்று தெரிவித்துள்ளது.