கொரோனாவுக்கு பின்னர் நாட்டில் ஐடி துறையில் பற்பல சாதகமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன.
இதனால் ஐடி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களுக்கு ஒரு முறைக்கு இருமுறை சம்பள அதிகரிப்பினை கொடுத்துள்ளன. அதோடு பதவி உயர்வு, தொடர்ச்சியான பணியமர்த்தல் என தொடர்ந்து சாதகமான நிகழ்வுகளாக அரங்கேறி வருகின்றன.
ஐடி துறையில் நிகழ்ந்து வரும் இந்த சாதகமான மாற்றங்கள், அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போக்கு தொடரும்
இது குறித்து டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி என் கணபதி சுப்ரமணியம், ஐடி துறையில் டிஜிட்டல் நுகர்வானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் தேவையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அடுத்த 3 -4 ஆண்டுகளுக்கு இந்த போக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளார்.
எப்போதும் இல்லாதளவு வளர்ச்சி
இது குறித்து ஹைத்ராபாத் சாப்ட்வேர் எண்டர்பிரைசஸ் அசோசியேஷன் (Hysea) நடத்திய மாநாட்டில் பேசிய கணபதி, 2021-ம் ஆண்டில் கொரோனாவின் தாக்கம் என்பது இருந்தாலும், வளர்ச்சி விகிதம் விரைவில் மீண்டு வந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சியினை கண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் கொரோனாவுக்கு மத்தியிலும் ஐடி துறையானது நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறைக்கு புகழாரம்
இந்திய ஐடி துறையினரின் திறமையானது தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், மற்றும் நிறுவனங்களால் இந்திய ஐடி துறையானது மதிக்கப்படுகின்றது என இந்திய ஐடி துறையினருக்கு புகாழாரம் சூட்டியுள்ளார்,. உண்மையில் இந்தியாவின் ஐடி துறையில் உள்ள திறன் மிகுந்த ஊழியர்களுக்கு, சர்வதேச அளவில் பெரும் அளவிலான தேவை இருந்து வருவது மறுக்கமுடியாத உண்மை தானே.
திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்
குறிப்பாக உலகெங்கிலும் தற்போது ஐடி துறையில் அட்ரிஷன் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு ஐடி ஊழியர்களுக்கு மிக சாதகமான அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொடர்ந்து பணியமர்த்தல் என்பது அதிகரிக்கலாம் என்பதோடு, சம்பள விகிதமும் அதிகரிக்கலாம். நடப்பு ஆண்டினை போலவே சலுகைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் திறன் மிகுந்த ஐடி உழியர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்வது நல்லது. இது எதிர்காலத்தில் நல்ல நல்ல வாய்ப்புகளை கைபற்ற உதவிகரமாக இருக்கலாம்.
பங்கு விலை நிலவரம்
கடந்த அமர்வில் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 3584.35 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.
இதே இதன் 52 வார உச்ச விலை 3989.90 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச விலையாக 2,785 ரூபாயாகவும் உள்ளது. இது நீண்டகால நோக்கில் நிறுவனம் வளர்ச்சி காணும்போது பங்கு விலையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.