இந்தியாவின் மிகப் பெரிய ஐடி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி சி எஸ்) -ன் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் நேற்று (ஜனவரி 17, 2020) வெளியாயின.
உலக பொருளாதாரமே மந்த நிலையில் தான் இருக்கிறது என்பதற்கு டி சி எஸ் நிறுவனத்தின் இந்த காலாண்டு முடிவுகள் ஒரு மெளன சாட்சியாகத் தெரிகிறது.
அந்த அளவுக்கு டி சி எஸ் நிறுவனத்தின் நிதி நிலை வளர்ச்சியும், நிகர லாபம் வளர்ச்சியும் மந்தமாக இருக்கின்றன.
நிகர லாபம்
டி சி எஸ் நிறுவனம், இந்த டிசம்பர் 2019 காலாண்டில் 8,118 கோடி ரூபாயை நிகர லாபமாகக் காட்டி இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் 2018 காலாண்டில் 8,105 கோடி ரூபாயை நிகர லாபமாகக் காட்டி இருந்தார்கள். ஆக நிகர லாபம் வெறும் 0.2 % தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது.
வருவாய்
டி சி எஸ் நிறுவனத்தின் வருவாய், இந்த டிசம்பர் 2019 காலாண்டில் 39,854 கோடி ரூபாயாம். கடந்த டிசம்பர் 2018 உடன் ஒப்பிட்டால் இது வெறும் 6.7 % வளர்ச்சி தானாம். கடந்த செப்டம்பர் 2019 காலாண்டுடன் ஒப்பிட்டால் இது 2.3 % மட்டும் கூடுதலாக வருவாயை ஈட்டி இருக்கிறது.
வருவாய் எங்கிருந்து
டி சி எஸ் நிறுவனத்தின் பெரு வாரியான வருவாய் வங்கி மற்றும் நிதி சேவைத் துறையில் இருந்து வந்து இருக்கிறது. டி சி எஸ் ஈட்டிய மொத்த வருவாயில் 30.4 சதவிகித வருவாய் இந்த வங்கி மற்றும் நிதி சேவையில் இருந்தும், 15.2 % வருவாய் சில்லறை வர்த்தக துறையில் இருந்தும் வந்து இருக்கிறதாம்.
எந்த கண்டம்
ஐடி கம்பெனிகளுக்கு வருமானம் என்றாலே அமெரிக்கா தானா என்றால் ஆம் தான் டி சி எஸ் நிறுவனத்தின் பதில். வட அமெரிக்காவில் இருந்து மட்டும் டி சி எஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 50.1 சதவிகித வருவாய் வந்து இருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து 31.8 சதவிகித வருவாய் வந்து இருக்கிறதாம்.
மற்ற நாடுகள்
டி சி எஸ்-க்கு வரும் மொத்த வருவாயில் சுமார் 5.7% தான். ஆக, இந்தியாவை அதிகம் சாராத டி சி எஸ் போன்ற நிறுவனங்களே இந்த அளவுக்கு மந்தமான வளர்ச்சியைக் காட்டுகிறார்கள் என்றால், உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதாகத் தான் தோன்றுகிறது.
உலகமே தேறணும்
இப்படி உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ், தன் வளர்ச்சியில் தேக்கம் காணும் போது, அது ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரமே தேங்கிக் கிடப்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது. ஆக பொருளாதாரத்தில் இந்தியா மட்டும் தேறினால் பத்தாது போல. ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே தேறி எழுந்து வர வேண்டும்.