இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் செப்டம்பர் காலாண்டில் 9,620 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதைத் தனது முதலீட்டாளர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த நிலையில் டிசிஎஸ் தற்போது முக்கியமான இரு திட்டத்தைக் கைப்பற்றுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. ஒன்று அமெரிக்க அரசின் தேசிய சுகாதார அமைப்பின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை திட்டத்தைக் கைப்பற்றி அமெரிக்க அரசு உடனான நட்புறவை மேம்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது.
மற்றொரு முக்கியமானது ஏர் இந்தியா திட்டம்..
ஏர் இந்தியா - டாடா
இந்திய அரசுக்கு சொந்தமான விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா 61,000 ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வந்த நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டேலெஸ் நிறுவனத்திற்குச் சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளது.
டேலெஸ் நிறுவனம்
இந்நிலையில் டேலெஸ் நிறுவனம் தற்போது ஏர் இந்தியா-வை உலகின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களுக்கு இணையாக டிஜிட்டல்மயமாக்க முடிவு உள்ளது.
டிஜிட்டல்மயமாக்கல் திட்டம்
இந்த மாபெரும் டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை ஏல முறையில் அளிக்க டேலெஸ் முடிவு செய்துள்ளது. டாடா குழுமத்தின் முதுகெலும்பாக டிசிஎஸ் நிறுவனம் இருக்கும் நிலையில் டிசிஎஸ் இருக்கும் வேளையில் எதற்காக இந்த ஏலம் என்ற கேள்வி வரலாம். ஆனால் அனைத்து திட்டத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு, அதை டேலெஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனம் சரியாகச் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம் இதற்கு முன்பு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், மலேசியன் ஏர்லையன்ஸ், குவான்டஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை யை அளித்துள்ளது.
கணபதி சுப்பிரமணியம்
விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் மற்றும் தரமான சேவைக்குப் பெயர் போன டிசிஎஸ் நிறுவனத்திற்கு ஏர் இந்தியாவின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் உண்மையிலேயே ஒரு மகுடம் தான். இந்த ஏர் இந்தியாவில் டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தை மெரிட் முறையில் பெற விரும்புகிறோம் என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான என்.கணபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஏலம் எதற்காக..?
ஏர் இந்தியா-வின் டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் ஏலம் மூலம் வெளிப்படையாக நடத்தப்பட்டாலும் இதில் வெல்லப்போது டிசிஎஸ் நிறுவனம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், நிர்வாக முறைகேடுகள், நிதி பரிமாற்றத்தில் தவறுகளைத் தடுக்கவே இந்த ஏல திட்டம் நடத்தப்படுகிறது.