இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்தால் அதிகப்படியான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.
ஆனால் இன்னும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையில் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் ராஜினாமா செய்யும் காரணத்தால் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அழைப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் வொர்க் ஃபரம் ஹோம் பற்றிய முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கிய போது முதல் நிறுவனமாக டிசிஎஸ் தனது ஊழியர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தது. இதன் பின்பு தான் அடுத்தடுத்து அனைத்து நிறுவனமும் WFH அளிக்கத் துவங்கியது.
வொர்க் ஃபரம் ஹோம்
சுமார் 2 வருடம் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த ஐடி ஊழியர்களைத் தற்போது அலுவலகத்திற்கு அழைக்கும் போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டு நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பெறுகின்றனர்.
ஊழியர்கள் வெளியேற்றம்
ஏற்கனவே ஊழியர்கள் வெளியேற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள ஐடி நிறுவனங்களுக்கு இது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த நிலையில் 5.92 லட்சம் ஊழியர்களைக் கொண்ட டிசிஎஸ் ஊழியர்களை அழைப்பதில் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 95 சதவீதம் பேர் வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில் முதல் கட்டமாக உயர் பதவிகளில் இருக்கும் டாப் 50000 ஊழியர்களை மட்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
50000 உயர் அதிகாரிகள்
இந்த 50000 ஊழியர்களும் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என டிசிஎஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்கம் ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்க உள்ளதாகவும், விரைவில் மற்ற ஊழியர்களும் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் முடிவு செய்துள்ளார்.
20% ஊழியர்கள்
2023ஆம் நிதியாண்டு அதாவது நடப்பு நிதியாண்டு மத்தியில் குறைந்தது 20 சதவீதம் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயம் இருக்கும், மற்ற 80 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
25 x 25 x 25 மாடல்
மேலும் டிசிஎஸ் நிர்வாகம் 25 x 25 x 25 மாடலை கட்டாயம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு உள்ளது. இந்த மாடலின் கீழ் மொத்த டிசிஎஸ் ஊழியர்களில் 2025 ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணியாற்றுவார்கள், மேலும் மொத்த பணி நேரத்தில் ஊழியர்கள் 25 சதவீத மட்டுமே அலுவலகத்தில் செலவழிப்பார்கள்.