இந்தியாவில் இன்று முன்னணியில் உள்ள துறைகளில் ஒன்று தகவல் தொழில்நுட்பம். இது வேலை வாய்ப்புகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த ஆண்டில் கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் கூட அபாரமான வருவாயினை கண்டன.
அதிகளவிலான பணியமர்த்தலை செய்தன. நடப்பு ஆண்டிலும் இந்த பணியமர்த்தலானது தொடரும் என்று, தொடர்ந்து நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையினரின் தேவையானது கணிசமான அளவு அதிகரித்துள்ளது எனலாம்.
டிஜிட்டல் மயமாகி வரும் நிறுவனங்கள்
ஆக நிறுவனங்கள் பலவும் ஏற்கனவே தங்களது வணிகங்களை டிஜிட்டல் மயமாக மாற்றத் தொடங்கியுள்ள நிலையில், ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான அனைத்து வசதிகளையும் செய்யத் தொடங்கியுள்ளன. கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்ற பிளெக்ஸி கலாச்சாரமும் பரவலாக பரவி வருகின்றது.
ஊழியர்களுக்கான தேவை
இதனால் டிஜிட்டல் தேவைகள் என்பது அதிகரித்துள்ளது. கூடவே சைபர் செக்யூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்டிஸ்ட் என பல துறைகளிலும் தேவையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக தொடர்ந்து ஐடி துறையில் திறன் மிக்க ஊழியர்களுக்கு என்றுமே தேவை என்பது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. ஆக ஊழியர்கள் தங்களது டிஜிட்டல் திறனை வளர்த்துக் கொள்வது தங்களை அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல வழிவகுக்கும்.
பயிற்சி கொடுத்து வேலை
கடந்த 2 காலாண்டுகளாகவே பெரும் அளவில் பணியமர்த்தல், சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் என ஐடி துறையில் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன. இந்த நிலையில் தற்போது ஐடி நிறுவனங்கள் தேவை அதிகம் உள்ளதால், புதியவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சரியான பயிற்சிகளை கொடுத்து பணியமர்த்தி வருகின்றன.
ஏன் ஃபிரஷ்ஷர்கள்
குறிப்பாக பல புதிய ஒப்பந்தங்களை செய்து வரும் நிறுவனங்கள், லாபத்தினை அதிகரிக்க, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல வருடம் அனுபவம் உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும்போது அதிக சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளதால், ஃபிரஷ்ஷர்களை தேர்ந்தெடுக்கின்றன,
லேட்டரல் பணியமர்த்தல் Vs ஃபிரஷ்ஷர்கள்
ஒவ்வொரு ஐடி மற்றும் பிபிஎம் சேவை நிறுவனங்களும் இதே நிலையில் தான் உள்ளன. குறிப்பாக தங்களது லாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு ஃபிரஷ்ஷர்கள் பணியமர்த்தி வருகின்றன. ஐடி துறையினை பொறுத்தவரையில் ஃபிரஷ்ஷர்கள், நிறுவனங்களுக்கு ஏற்ற ஆப்சனாக உள்ளனர். அவர்களுக்கு போதிய பயிற்சியினை கொடுத்து பணியமர்த்திக் கொள்கின்றன. இது லேட்டரல் பணியமர்த்தலை விட, குறைவான செலவாகவே நிறுவனங்களால் பார்க்கப்படுகின்றன.
டிசிஎஸ் பணியமர்த்தல்
நடப்பு நிதியாண்டில் டாப் 4 ஐடி நிறுவனங்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரை பணியமர்த்தல் திட்டமிட்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நடப்பு நிதியாண்டில் 40,000 ஃபிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் மிக அதிகளவில் பணியாளர்களை கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். கடந்த ஜூன் காலாண்டில் மொத்தம் லட்சம் ஊழியர்களையும் தாண்டியுள்ளது.
இன்ஃபோசிஸின் திட்டம்
இதே இன்ஃபோசிஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 35,000 ஃபிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் 26,000 பேராக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தேவை அதிகரித்து வரும் நிலையில், பணியமர்த்தலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
விப்ரோவின் திட்டம்
நாட்டின் மற்றொரு மிகப்பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் 6000 ஃபிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 30,000 பேருக்கு ஆஃபர் லட்டர்களை கொடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இவர்கள் 2023ம் நிதியாண்டில் நிறுவனத்தில் சேரலாம் என தெரிவித்துள்ளது.
Array
கடந்த ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அளவு 12,000 ஊழியர்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. விப்ரோ நிறுவனமும் லேட்டரல் பணியமர்த்தலை விட, ஃபிரஷ்ஷர்களை பணியமர்த்துவது நிறுவனங்களின் செலவினையும் குறைக்கும், இதனால் லாபம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹெச்.சி.எல்லின் செம திட்டம்
ஹெச்.சி.எல் டெக் நிறுவனமும் நடப்பு நிதியாண்டில் 22,000 பேரினை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டினை காட்டிலும் 50% அதிகமாகும், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 6000 ஃபிரஷ்ஷர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.