இந்திய ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து அதிகளவிலான ஐடி திட்டங்களை பெற்று வரும் நிலையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால் போட்டியின் காரணமாக 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு கொடுத்து ஊழியர்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் ஐடி நிறுவனங்கள் தள்ளப்பட்டு உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சனையை சமாளிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் அதாவது கல்லூரி படிப்பை முடித்து பணியில் சேர தயாராக உள்ளோரை அதிகளவில் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை ஊழியர்கள் தட்டுப்பாட்டை போக்க அதிகளவிலான பிரஷ்ஷர்கள் சேர்க்க முடிவு செய்திருந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது இதில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
பிரஷ்ஷர்கள்
டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய 4 நிறுவனங்கள் இணைந்து இந்த வருடம் மட்டும் சுமார் 1,20,000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க முடிவு செய்திருந்த நிலையில், தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் அதிக சம்பளம் போன்ற பிரச்சனை தலையை மீறி சென்றுள்ள காரணத்தால் இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
1,60,000 பேருக்கு வேலை
இதன் மூலம் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய 4 நிறுவனங்களும் இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 1,60,000 பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த 4 ஐடி நிறுவனத்தில் மட்டுமே இந்திய ஐடி துறையின் மொத்த 46 லட்சம் ஊழியர்களில் நான்கில் ஒரு பங்கு வைத்திருக்கும் நிலையில் புதிய இலக்கு மூலம் பெரும் மாற்றத்தை செய்ய உள்ளது.
6 மாதம்
நடப்பு ஆண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்கள் சுமார் 1,02,517 ஊழியர்களை பணியில் சேர்த்துள்ள நிலையில், அடுத்த 6 மாதத்தில் இன்னும் 60000 ஊழியர்களை பணியில் சேர்க்க உள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்களின் புதிய ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள இதே வேளையில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் ஐடி நிறுவனத்தின் attrition rate அதிகரித்துள்ளது.
சிறிய கல்லூரி மாணவர்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனத்தில் அதிகளவிலான பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்துவது மூலம் கல்லூரி படிப்பை முடிந்த மாணவர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. இதன் மூலம் பெரிய கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாமல் சிறு கல்லூரி மாணவர்களுக்கும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ நிறுவனங்களில் சேர வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாதிப்பு
ஆனால் அதிகளவிலான பிரஷ்ஷர்களை பணியில் சேர்ப்பது மூலம் ஐடி நிறுவனத்தில் வர்த்தகம் குறையும்போது அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது குறைந்தது அடுத்த 5 வருடத்திற்கு நடக்காது என்பதும் உறுதியாகியுள்ளது.