இந்திய ஐடி துறை கொரோனாவுக்கு முன்பு சரி, பின்பும் சரி தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான முடிவின் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறும் நிலை உருவாகியுள்ளது.
இப்புதிய வர்த்தகத்தைச் சமாளிக்கவும், இந்தியாவின் டாப் 5 நிறுவனங்களில் உருவாகியுள்ள ஊழியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க முக்கியமான முடிவை ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பிரஷ்ஷர்கள் அதாவது கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது. எந்த நிறுவனங்கள் எவ்வளவு பேரைத் தேர்வு செய்யப்போகிறது..? முழு விபரம்..
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தாலும், பலர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் காரணத்தால் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ
2020 ஜூன் காலாண்டில் வெறும் 9,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்திய டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பல்வேறு காரணத்திற்காக இந்த ஜூன் காலாண்டில் சுமார் 40000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்நிலையில் 2022ஆம் நிதியாண்டில் புதிதாக 1 லட்சம் ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 5 லட்சம் ஊழியர்கள் என்ற எந்த ஒரு ஐடி நிறுவனமும் அடையமுடியாத உயரத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 40000 பிரஷ்ஷர்களைத் தனது நிறுவன பணிகளில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்போசிஸ் திட்டம்
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்ப வர்த்தகப் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் இன்போசிஸ் 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 35,000 கல்லூரி பட்டப்படிப்பை முடித்த மாணவர்களைத் தனது நிறுவன பணிகளில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அளவிலான பணிகளை வெளிநாட்டிலும் நிரப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
விப்ரோ திட்டம்
2021ஆம் நிதியாண்டை விடவும் 33 சதவீதம் அதிகமான ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ள விப்ரோ, 2022ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் ஏற்கனவே 2000 பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது விப்ரோ. மேலும் 2023ஆம் நிதியாண்டில் 22,000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது.
1 லட்சம் வேலைவாய்ப்பு
இந்தியாவின் டாப் 3 ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய 3 நிறுவனங்கள் சேர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் சுமார் 1 லட்சம் பிரஷ்ஷர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிலும் முக்கியமாக டிசிஎஸ் மனிதவள பிரிவு தலைவர் மிலிந்த் லக்காட் 40000 பிரஷ்ஷர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தியச் சந்தை
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாக நினைத்ததை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தையும், திட்டங்களையும் வெளிநாட்டில் இருந்து கைப்பற்றி வருகிறது. இந்தத் திட்டத்தைக் குறித்த காலகட்டத்திற்குள் அளிக்க வேண்டியது கட்டாயத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் அதிகளவிலான ஊழியர்களைப் பணிகளில் சேர்க்கத் தீவிரமாக உள்ளது.
சிறப்பான வளர்ச்சிப் பாதையில்
இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்களைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு 70 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. மேலும் அடுத்த 5 வருடத்திற்கு இந்திய ஐடி துறை சிறப்பான வளர்ச்சிப் பாதையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது.