நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், அதன் நிகர லாபத்தில் 14 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 7008 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக புதிய திட்டங்கள் தாமதம் மற்றும் திட்டங்கள் செயலாக்கம் தாமதம் உள்ளிட்ட பல காரணங்களால் வீழ்ச்சி கண்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் வீழ்ச்சி கண்டு இருந்தாலும் லாபத்தில் தான் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இடைக்கால டிவிடெண்ட்
இதே ப்ளூம்பெர்க் ஆய்வாளர்கள் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 7,694 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் அதனை விட குறைந்து 7,008 கோடி ரூபாயாக அதன் நிகர லாபம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த நிறுவனம் இடைக்கால ஈவுத் தொகையான ஒரு பங்குக்கு 5 ரூபாய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருவாய் அதிகரிப்பு
எனினும் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 0.39 சதவீதம் அதிகரித்து 38,322 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் நிலையான நாணய அடிப்படையில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 6.3 சதவீதம் வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
மார்ச் காலாண்டு நிலவரம்
இதே கடந்த மார்ச் காலாண்டில் முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 0.94 சதவீதம் வீழ்ச்சி கண்டு 8,049 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த காலாண்டோடு ஒப்பிடும் போது 12.9 சதவீதம் குறைவாகும்.
கொரோனாவால் பாதிப்பு
இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன், டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாயானது பெரும் அளவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. சரியாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவில் பாதிப்பு தொடங்கியது.
ஐடி தேவை? எங்கு? எவ்வளவு?
மேலும் ஐடி துறையின் தேவையானது சில இடங்களில் அதிகரித்து இருந்தாலும், பெரும்பான்மையான இடங்களில் குறைந்துள்ளது. ஐரோப்பாவில் 2.7% அதிகரித்தும், லத்தீன் அமெரிக்காவில் 0.2% அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. எனினும் தென் அமெரிக்காவில் 6.1% வீழ்ச்சியும், இங்கிலாந்தில் 8.5% வீழ்ச்சியும், இந்தியாவில் 27.6% வீழ்ச்சியும், ஆசிய பசிபிக் பகுதிகளில் 3.2% வீழ்ச்சியும் காணப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய திட்டங்களில் ஒப்பந்தம்
கொரோனா காலத்தின் ஆரம்பத்தில் வர்த்தகம் சீர்குலைந்து காணப்பட்டாலும், தற்போது வாடிக்கையாளர்கள் தற்போது தங்களது செயல்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளனராம். கொரோனாவிற்கு பின்பு தற்போது தான் புதிய திட்டங்களை தொடங்க துவங்கியுள்ளனராம். மேலும் பல திட்டங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.