இந்தியாவின் ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ், TCS iON மூலம் CAREER EDGE-YOUNG PROFESSIONAL என்ற 15 நாட்கள் இலவச பயிற்சியினை வழங்கி வருகின்றது.
மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.
அதெல்லாம் சரி யார் யார் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும், வாருங்கள் பார்க்கலாம்.
15 நாள் இலவச பயிற்சி
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம் ஆன்லைன் மூலமாக இந்த 15 நாள் பயிற்சியினை பிரெஷ்ஷர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த பயிற்சியினை இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பிரெஷ்ஷர்களுக்கு தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள மிக அவசியமானதாக இருக்கும்.
திறனை வளர்த்துக் கொள்ள முடியும்
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, கம்யூனிகேஷன், வணிக யுக்திகள், நிதி மற்றும் டிஜிட்டல் திறன் உள்ளிட்ட பலவற்றிலும் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் ஊழியர்கள் தங்களை எதிர்காலத்திற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள முடியும் என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
முழு விவரங்கள் இங்கே
டிசிஎஸ் நிறுவனத்தின் வணிக பிரிவான iON மூலம் இந்த பயிற்சியானது வழங்கப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tcsion.com/dotcom/TCSSMB/ என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம் இது இரண்டு வார பயிற்சியாகும்.
எவ்வளவு நேரம் பயிற்சி?
இந்த இரண்டு வார பயிற்சியில் மாணவர்கள் குறைந்தபட்சம் 7 - 10 மணி நேரம் கலந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியில் ஒவ்வொரு முக்கிய தொகுதியும் 1 - 2 மணி நேரத்தில் முடிக்கப்படும். இந்த பயிற்சியில் இணைய டிசிஎஸ்-ன் இணையத்தில் விண்ணபிக்கலாம்.
என்னென்ன கற்றுக் கொள்ளலாம்
இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் அலுவலக சூழல், தகவல் தொடர்பு திறன், கணக்கியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படைகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பலவற்றையும் கற்றுக் கொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது பயோடேட்டாக்களில் ஒரு பாசிட்டிவான ஈர்ப்பினை இந்த பயிற்சி உருவாக்கும். கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடும் போது இது மிக உதவிகரமானதாக இருக்கும்.