கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்தனர். இது ஊழியர்களுக்குத் தங்கள் வாழ்வில் கிடைக்காத ஜாக்பாட் ஆக மாறியது.
இந்த 3 வருட வொர்க் ப்ரம் ஹோம்-ல் சிங்கிள் ஆக இருந்தவர்களுக்குத் திருமணமாகி குழந்தையும் பெற்ற பலரை பார்க்கிறோம். இது மட்டும் அல்லாமல் சொந்த ஊரில் வீடு கட்டுதல், நிலம் வாங்குவது, பெற்றோர்-க்கு மருத்துவச் சிகிச்சை எனப் பல முக்கியமான விஷயங்களைத் தாண்டி. பல வருடங்களுக்குப் பின்பு குடும்பத்தில் அனைவரும் ஒன்று கூடி இருக்கும் சூழ்நிலை இந்த வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது ஊழியர்களுக்கான வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை முழுமையாக ரத்துச் செய்ய முடிவு செய்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்யும் சலுகை ஊழியர்களுக்கு நிறுத்த முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை நவம்பர் முதல் அலுவலகத்திற்குத் திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவிலேயே முதலாவதாக ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் செய்ய அனுமதி அளிக்கப் பெரிய ஐடி சேவை நிறுவனம் எனப் பெருமை கொண்டுள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
நவம்பர் 15 கடைசி
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அறிவிப்பின் படி நவம்பர் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் அலுவலகத்தில் சேருமாறு ஊழியர்களை டிசிஎஸ் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் நவம்பர் மாதத்திற்குப் பிறகு டிசிஎஸ் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலுவலகம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் இந்த முடிவின் வாயிலாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளரும் அலுவலகத்திற்குச் சென்று தான் பணியாற்ற வேண்டும். இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக WFH நீக்கப்பட்டு உள்ளது.
கோவிட் தடுப்பூசி
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 95 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பகுதியளவு தடுப்பூசியும், 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாகத் தடுப்பூசியும் போடப்பட்டிருப்பதால், நிறுவனம் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கிறது.
ராஜேஷ் கோபிநாதன்
தற்போது, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது நிறுவனத்தில் சுமார் 20 முதல் 25 சதவீத ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து பணியாற்றத் திரும்பியுள்ளனர். TCS இன் CEO மற்றும் MD, ராஜேஷ் கோபிநாதன் சமீபத்தில் கூறுகையில், நிறுவனம் விரைவில் "ரிட்டர்ன்-டு-ஆஃபீஸ் மாடலைத் தொடரும், ஏனெனில் 25/25 திட்டத்தை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.