இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் துறை என்றால் அது கட்டாயம் ஐடி துறை என்றால் மிகையில்லை.
இதேவேளையில் இந்திய ஐடி துறை நிறுவனங்கள் பொதுவாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது கிடையாது, ஆனால் டிசிஎஸ் தனது வர்த்தகத்தையும், நிதிநிலையையும் மேம்படுத்திக்கொள்ள முடிவு செய்து 2015ல் சில குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
இந்தப் பணிநீக்கத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒட்டு மொத்த ஐடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா குழுமத்தின் அதிக லாபத்தைக் கொடுக்கக் கூடிய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2015ஆம் ஆண்டுத் திருமலை செல்வன் சண்முகம் என்பவரை பர்பாமென்ஸ் காரணம் காட்டி பணிநீக்கம் செய்தது. இதை எதிர்த்துச் சென்னை லேபர் கோர்ட்-ல் வழக்கு தொடுத்தார்.
திருமலை செல்வன்
இந்த வழக்கின் பலகட்ட விசாரணையில் டிசிஎஸ் வாதங்களும் விளக்கங்களும் ஏற்புடையதாக இல்லை என்று நீதிபதிகள் கூறியது மட்டும் அல்லாமல் திருமலை செல்வன்-ஐ மீண்டும் பணியில் சேர்க்கவும் 7 வருடம் எவ்விதமான விடுப்பும் இல்லாத வகையில் பணியில் சேர்க்கப்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
வெட்டியான காரணங்கள்
இந்தத் தீர்ப்பு திருமலை செல்வனுக்கு மட்டும் அல்லாமல் இனி வெட்டியான காரணங்களைக் கூறி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் அனைத்து ஐடி நிறுவனங்களுக்கும் பெரும் சிக்கலாக மட்டும் அல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் திருமலை செல்வன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து வழக்கு தொடர்ந்து எளிதாக வென்றிட முடியும், இது பணிநீக்கம் செய்யப்படும் அனைத்து ஐடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
பணி நீக்கம்
தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதே போன்ற தீர்ப்புகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். இந்த உத்தரவு இந்தியத் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றானதால், இனி இத்துறையில் பணி நீக்கம் நடவடிக்கைகள் பெரும் தாக்கத்தை உருவாக்கும்.
ஐடி ஊழியர்கள் சங்கங்கள்
இந்த வழக்கில் ஐடி ஊழியர்களுக்கான சங்கங்களும் தொடர்பில் இருந்தது, இந்த வழக்கின் வெற்றி ஐடி ஊழியர்களுக்கான யூனியனின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. இதன் மூலம் இனி ஒவ்வொரு நிறுவனத்திலும் ஐடி யூனியன் அமைக்கப்பட்டாலும் வியப்படையத் தேவையில்லை.
நஷ்டஈடு
மேலும் தற்போதைய சட்டதிட்டத்தில் ஒரு ஊழியர் முறையற்ற வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டால் அதன் மூலம் ஏற்படும் நஷ்டஈடைக் கணக்கிட எவ்விதமான அடிப்படை கணக்கீடும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் திருமலை செல்வன் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது மட்டும் அல்லாமல் வழக்கு நடந்த 7 வருடத்திற்கும் கரியர் கேப் இல்லாத வகையில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
ஐடி நிறுவனங்களுக்குச் செக்
இதனால் இனி எந்தொரு இந்திய ஐடி நிறுவனங்களும் ஈசியாக ஊழியர்களை மட்டமான காரணங்களையும், பர்பாமென்ஸ் காரணங்களைக் காட்டி பணிநீக்கம் செய்ய முடியாது.
ஐடி ஊழியர்களுக்கான வெற்றி
அப்படிச் செய்தால் குறைந்தது 5 சதவீத ஊழியர்களாவது ஐடி யூனியன் உதவிகள் உடன் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமலை செல்வன் வெற்றி அவருடைய வெற்றி மட்டும் இல்லை, பல லட்சம் ஐடி ஊழியர்களுக்கான வெற்றி.