இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக ஐடி ஊழியர்கள் 90 சதவீதம் பேர் வீட்டில் இருந்து கடந்த 1.5 வருடமாகப் பணியாற்றி வருகின்றனர், இதனால் பல லட்சம் பேர் பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு ஐடி நிறுவனமும் தங்களது ஊழியர்களைப் பகுதி பகுதியாக அழைத்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், நொய்டா, மும்பை, ஆகிய பகுதிகளில் இருக்கும் நிறுவனம் அழைத்து வரும் காரணத்தால் பெரு நகரங்களில் மக்களின் கூட்டம் கொரோனாவுக்கும் முந்தைய காலகட்ட அளவீட்டை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் ஊழியர்களுக்கு வேக்சின் பாதுகாப்பு கொடுத்துள்ள காரணத்தாலும், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள காரணத்தாலும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவை காரணத்திற்காகவும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
டிசிஎஸ் திட்டம்
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ்-ல் தற்போது 5,00,000 ஊழியர்கள் உள்ள நிலையில் பெரும் பகுதி ஊழியர்களை இந்த வருடத்தின் இறுதிக்குள் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஊழியர்கள் சிலர் மகிழ்ச்சியில் இருந்தாலும், பலர் சோகம் அடைந்துள்ளனர்
ராஜேஷ் கோபிநாதன்
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் வெளியிட்ட அறிவிப்பில் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்திற்குள் 70 முதல் 80 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க உள்ளதாக முடிவு செய்துள்ளது. இந்த அளவீடுகள் கொரோனா தொற்றின் பரவல் அடிப்படையில் இறுதியாக முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
மீண்டும் அலுவலகம்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் அவர்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது ஊழியர்கள் அழைப்பு உறுதியாகியுள்ளது. ஆனால் ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் எந்த அலுவலகத்தில் எவ்வளவு ஊழியர்கள் என்பதில் மட்டுமே மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Work from Home
இந்தியாவில் லாக்வுடன் அறிவிக்கப்பட்ட உடனே ஐடி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில், டிசிஎஸ் தான் முதல் முறையாக அனைவருக்கும் Work from Home கொடுத்து ஐடி துறை வேலைவாய்ப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது.
டிரெண்ட் செட் செய்யும் டிசிஎஸ்
இதேபோல் தற்போது கொரோனாவிலிருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில் அதிகப்படியான ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து இந்திய ஐடி துறையில் டிரெண்ட் செட் செய்ய உள்ளது.
நிறுவன கைப்பற்றல் திட்டம்
டிசிஎஸ் நிறுவனம் தற்போது 195 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பிற்கு மதிப்பீடு செய்யப்பட்டு உள்ள நிலையில், நிறுவனங்களைக் கைப்பற்றும் திட்டம் குறித்தும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் பேசியுள்ளார்.
டிசிஎஸ் முடிவு
டிசிஎஸ் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் தீவிரமாக இருந்தாலும், நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் தற்போது வேகம் காட்டவில்லை என அறிவித்துள்ளது. வர்த்தகச் சந்தையில் தற்போது நிறுவனங்களின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் நிறுவனங்களைக் கைப்பற்றாமல் நிறுவனங்கள் உடன் கூட்டணி வைக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ்
இந்திய ஐடி சந்தையில் டிசிஎஸ் நிறுவனத்தைக் காட்டிலும் இன்போசிஸ் வேகமாக வளர்ந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியப் பிரச்சனையாக இருந்தாலும், இது டிசிஎஸ் நிறுவனத்தை எந்த விதத்திலும் பாதிக்காது எனத் தெரிவித்துள்ளார் டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன்.