இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் ஜூன் காலாண்டில் பல மாற்றங்களை எதிர்கொண்ட நிலையில் இக்காலாண்டு முடிவுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வெள்ளிக்கிழமை சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா பங்குகளின் ரேட்டிங்-ஐ 'Hold' என மாற்றியது ஜெப்ரீஸ், இது பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் டிசிஎஸ் முதலாவதாகத் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெள்ளியன்று, ஜூன் காலாண்டில் நிகர லாப அளவு 5.21 சதவீதம் உயர்ந்து ரூ.9,478 கோடியாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.9,008 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில் சந்தை கணிப்புகள் சற்று அதிகமாகவே இருந்த நிலையில் 9,478 கோடி ரூபாய் லாபம் என்பது குறைவானது தான்.
ஜூன் காலாண்டு
இதோடு கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டில் ரூ.45,411 கோடியுடன் ஒப்பிடுகையில், ஜூன் 2022 காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 16.2 சதவீதம் அதிகரித்து ரூ.52,758 கோடியாக உயர்ந்துள்ளது.
நிலையான நாணய வருவாய்
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் நிலையான நாணய வருவாய் வளர்ச்சி கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 15.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
Ebit மார்ஜின்
Ebit மார்ஜின் ஜூன் காலாண்டில் 23.1 சதவீதமாக இருந்தது, இது மார்ச் காலாண்டில் 25 சதவீதமாகவும், கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 25.5 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய வாடிக்கையாளர்கள்
ஜூன் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆர்டர் புக் 8.2 பில்லியன் டாலராக உள்ளது, இக்காலாண்டில் 100 மில்லியன் டாலருக்கு அதிகமான பிரிவில் 9 வாடிக்கையாளர்களையும், 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான பிரிவில் 19 வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.
6.06 லட்சம் ஊழியர்கள்
ஜூன் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய ஊழியர்களின் எண்ணிக்கை 14,136 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6,06,331 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12 மாதத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 19.7 சதவீதமாக உள்ளது.
ஈவுத்தொகை
மேலும் ஜூன் காலாண்டு முடிவுகளில் டிசிஎஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு சுமார் 8 ரூபாய் ஈவுத்தொகை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.