ஐடி. இந்த இரண்டு எழுத்து கொண்ட துறை தான், இன்று ஒட்டு மொத்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த ஐடி துறையில் எந்த அளவுக்கு கவர்ச்சி இருக்கிறதோ, அந்த அளவுக்கு, அதில் சில கசப்பான விஷயங்களும் இருக்கின்றன. அதில் முதல் விஷயம் லே ஆஃப். எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம்.
சமீபத்தில், கொரோனா வைரஸ் பிரச்சனை தலை எடுத்த போது, பல ஐடி மற்றும் ஐடி சார்ந்த கம்பெனி ஊழியர்களுக்கு வேலை பறி போனதை செய்தித் தாள்களிலும், வலைதளங்களிலும் படித்து இருப்போம்.
TCS செய்த நல்ல காரியம்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி கம்பெனிகளில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தற்போது பெரும்பாலான ஐடி கம்பெனிகள் செய்யாத அல்லது செய்ய முடியாத ஒரு சில நல்ல காரியங்களை அசல்டாகச் செய்து இருக்கிறது. அப்படி என்ன நல்ல காரியங்களைச் செய்து இருக்கிறது? வாருங்கள் பார்ப்போம்.
சம்பள உயர்வு
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கம்பெனி, தன்னுடைய லட்சக் கணக்கான ஊழியர்களுக்கும், இந்த அக்டோபர் 2020-ல் சம்பள உயர்வு கொடுக்க இருக்கிறதாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தன் ஊழியர்களில் சிலருக்கு பதவி உயர்வு கொடுத்தது ஆனால் சம்பள உயர்வை ஒத்தி வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
16,000 பேர்
கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்கிற ரீதியில், சம்பள உயர்வோடு, மற்றும் ஒரு நல்ல செய்தியைச் சொல்லி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2020 காலாண்டில் மட்டும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) சுமாராக 16,000 பேரை வேலைக்கு எடுத்து இருக்கிறார்களாம். வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கும் பல ஐடி இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறது டிசிஎஸ்.
கல்லூரி மாணவர்கள்
வெறுமனே சுமாராக 16,000 பேரை வேலைக்கு எடுக்கவில்லை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS). இந்த 16,000 பேரில் சுமாராக 7,200 கல்லூரி மாணவர்களை (Fresher) வேலைக்கு எடுத்து, மாணவர்கள் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சி இருக்கிறது டிசிஎஸ் ஐடி கம்பெனி.
செப்டம்பர் 2020 காலாண்டு
கடந்த ஜூலை 2020 - செப்டம்பர் 2020 வரையான, 2020 - 21 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கம்பெனி, 5.24 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டி இருப்பதாகச் சொல்கிறது. இது கடந்த ஜூன் 2020 காலாண்டை விட 7.2 சதவிகிதம் அதிகம்.
பறக்கும் பங்கு விலை
அதோடு சமீபத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கம்பெனி தன் பங்குகளை பை பேக் செய்ய இருப்பதாகச் சொல்லி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கம்பெனியின் பங்கு விலை ராக்கெட் போல விலை ஏற்றம் கண்டு வருகிறது.
5 நாட்களில் 15% விலை ஏற்றம்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்கு விலை கடந்த 1 அக்டோபர் 2020 அன்று சுமாராக 2,500 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. ஆனால் இன்று தன் வாழ் நாள் உச்சமாக 2,885 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது டிசிஎஸ் பங்குகள். ஆக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் சுமாராக 15 சதவிகிதம் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது டிசிஎஸ்.