இந்திய ஐடி நிறுவனங்கள் ஒருபக்கம் ரெசிஷன் அச்சத்தால் என்ன செய்வது எனக் குழம்பியிருக்கும் வேளையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்கள் மத்தியில் முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கிய போது அனைத்து ஊழியர்களுக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்து மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த டிசிஎஸ் நிறுவனம் தற்போது ஊழியர்களைத் திரும்பவும் அலுவலகத்திற்கு அழைக்க முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இதையும் தாண்டி முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது டிசிஎஸ்..
டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனம் வொர்க் ப்ரம் ஹோம்-ல் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு அழைத்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டுகள் டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்து அலுவலத்திலும் 25/25 மாடலை கொண்டு வர வேண்டும் என்பது தான் அதன் இலக்காக வைத்துள்ளது.
20 சதவீத ஊழியர்கள்
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தில் வெறும் 20 சதவீத ஊழியர்கள் அதுவும் மூத்த அதிகாரிகள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகின்றனர், மற்ற அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இளம் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
கணபதி சுப்பிரமணியம்
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான என்.கணபதி சுப்பிரமணியம் கூறுகையில், வீட்டில் இருந்தே பணியாற்றுவது எந்த ஒரு நிறுவனத்திற்கும் தீர்வாகாது. இதுமட்டும் அல்லாமல் கொரோனா தொற்று உலகளவில் அச்சம் அடையும் அளவில் இருந்து மாறியுள்ளது.
வாடிக்கையாளர்கள்
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் புதிய திட்டத்தை அளிக்கும் போது அலுவலகத்திற்கு வர துவங்கியுள்ளனர். காலியான அலுவலகம், லேப்களைக் காட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது.
இளம் தலைமுறையினர்
இதேவேளையில் இளம் தலைமுறையினருக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மை, வாடிக்கையாளர்களின் தேவைகள், தேர்வுகள், இணக்க அபாயங்கள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய ஊழியர்கள்
மேலும் புதிதாக நிறுவனத்தில் சேர்பவர்கள் தங்களின் உயர் அதிகாரிகளை, முன்மாதிரிகளைப் பார்க்காமல் இருப்பது நிலையான மற்றும் வளமான வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்காது. வீட்டில் இருந்து பணியாற்றுவது தற்காலிகமானது தான் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான என்.கணபதி சுப்பிரமணியம் கூறுகிறார்.