இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் கடந்த 2 வாரமாகச் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்த அதீத வளர்ச்சிக்கான முக்கியக் காரணம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு தான்.
ஆம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் தனது வர்த்தக வளர்ச்சிக்காகப் பல ஆண்டுத் தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்தச் சுழற்சியின் முதல் பகுதி தற்போது துவங்கியுள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் நிப்டி 50 குறியீட்டின் கீழ் நாட்டின் 4 முன்னணி ஐடி நிறுவனங்களும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாத் அறிவித்தபடி பல ஆண்டுத் தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியின் முதல் படியில் தற்போது இருக்கும் நிலையில், டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேதான் அமைக்க உள்ளதாகவும்.
இது நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பல வகையில் பயனுள்ளதாகவும், எவ்வித தயக்கமுமின்றிப் பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக இருக்கும் எனக் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட வளர்ச்சி
இந்தக் கிளவுட் சேவையின் கீழ் வாடிக்கையாளர்களுக்குப் புதிய வர்த்தக அனுபவமும், நிறுவனத்தில் பல புதிய வர்த்தக மாடல்களையும் உருவாக்க முடியும். இவை அனைத்தும் நிறுவனத்திற்குள்ளே இருந்தே செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பாகக் கோபிநாத் கருதுகிறார்.
முதலீடு
இத்திட்டத்திற்காக டிசிஎஸ் பல பிரிவுகளில் பல கட்டங்களாக முதலீடு செய்ய உள்ளது. மேலும் தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியின் கீழ் பாதுகாப்பான தடையில்லா பணியாற்றும் தளம், 25/25 விஷன், இன்னும் பல திட்டங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளது என டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2வது காலாண்டு
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் டிசிஎஸ் நிறுவனம் 2வது காலாண்டில் புதிதாக 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளார். இதில் 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பீனிக்ஸ் சிஸ்டம்ஸ் ஒப்பந்தமும் அடக்கம்.
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், 2வது காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 6.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முதல் காலாண்டில் டிசிஎஸ் வருவாய் 4.8 சதவீதம் வரை மட்டுமே வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் பங்குகள்
இன்றைய வர்த்தக முடிவில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 3.02% வளர்ச்சி அடைந்து 2,818.45 ரூபாயை அடைந்துள்ளது, மேலும் இன்று 2.885 ரூபாய் என்ற அதிகப்படியாக வளர்ச்சியைப் பெற்று 52 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது டிசிஎஸ். இதோடு டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பீடு இன்றைய வர்த்தக முடிவில் 10.59 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.