ஐடி துறையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து தேவையானது அதிகமாக இருந்து வரும் நிலையில், வளர்ச்சி விகிதமானது அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் வளர்ச்சி விகிதமானது கணிசமான வளர்ச்சியினை எட்டியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக தேவை அதிகரித்து, நல்ல வளர்ச்சி, பல ஒப்பந்தங்கள் என ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு கொண்டிருந்தாலும், ஐடி நிறுவனங்களுக்கு இந்த காலகட்டத்திலும் ஒரு பெரிய சவால் இன்று வரையில் இருந்து வருகின்றது. அது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வரும் அட்ரிஷன் விகிதம் தான்.
பெரும் சவால்
சொல்லப்போனால் ஒவ்வொரு ஐடி நிறுவனமும் எதிர்கொண்டு வரும் ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது. குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்களும் இப்பிரச்சனையை எதிர் கொண்டுள்ளன.
தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை
இப்படி சில சவாலான நிலைக்கு மத்தியிலும் நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள சம்பள அதிகரிப்பு, வொர்க் பிரம் ஹோம், ஹைபிரிட் பணி மாடல் என பலவற்றையும் ஆலோசித்து வருகின்றன. இது திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான ஆப்சனாகவும் நிறுவனங்கள் பார்க்கின்றன. அதோடு ஊழியர்களுக்கு பதவி உயர்வு என கொடுத்து தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றன.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது ஜூன் 2022வுடன் முடிவடைந்த 12 மாத கால அடிப்படையில் 19.7% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 6 காலாண்டுகளில் மிக அதிகமாகும். இந்த விகிதம் மார்ச் 2022வுடன் முடிவடைந்த காலாண்டில் 17.4% ஆகவும் இருந்தது.
விப்ரோ
இதே விப்ரோவின் அட்ரிஷன் விகிதமானது ஜூன் 2022வுடன் முடிவடைந்த 12 மாதங்களில் 23.3% ஆகவும் அதிகரித்துள்ளது. எனினும் இது கடந்த காலாண்டினை காட்டிலும் சற்று குறைந்துள்ளது. கடந்த மார்ச் 2022 காலாண்டில் அட்ரிஷன் விகிதமானது 23.8% ஆக இருந்தது. ஆக கடந்த காலாண்டினை காட்டிலும் சற்று குறைந்துள்ளது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல் டெக்
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதமானது கடந்த மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது 23.8% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 21.9% ஆக இருந்தது. இது மார்ச் 2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் 11.8% ஆக இருந்த நிலையில், மார்ச் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.8% ஆக அதிகரித்துள்ளது.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு
திறமையான ஊழியர்களை தக்க வைத்து கொள்ள நிறுவனங்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு மற்றும் பிளெக்ஸிபிள் பணியமர்த்தல் என பல சலுகைகளை வழங்கி வருகிறது.
விப்ரோவின் எம்டி மற்றும் சிஈஓ தியரி டெலாபோர்ட், நாங்கள் காலாண்டு அடிப்படையில் பதவி உயர்வு சலுகைகளை அறிவித்து வருகின்றோம். இது முந்தைய சலுகைகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. என தெரிவித்துள்ளார். இதனை ஜூலை மாதம் முதல் கொண்டு விப்ரோ செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. சம்பள உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது நிறுவனத்தின் மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டில் இருந்து பணி
ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் தற்போது வரையில் வீட்டில் இருந்தே ஊழியர்களை பணிபுரிந்து வர அனுமதி கொடுத்துள்ளது. சில நிறுவனங்கள் ஹைபிரிட் மாடல் பணியினையும், அமல்படுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளன. எனினும் பெரும்பாலான நிறுவனங்களும் ஹைபிரிட் மாடல் பணியினை கையாண்டு வருகின்றன.
லாபம்
டிசிஎஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.2% அதிகரித்து, 9478 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் வருவாய் விகிதமானது 16.2% அதிகரித்து, 52,758 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 45,411 கோடி ரூபாயாக இருந்தது.
இதே விப்ரோ நிறுவனத்தின் லாபம் 20.9% அதிகரித்து, 2563 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் நிகரலாபம் 2.4% அதிகரித்து, 3283 கோடி ரூபாயாக ஜூன் காலாண்டில் அதிகரித்துள்ளது.