அமெரிக்காவில் கடந்த சில வாரங்களில் முன்னணி நிறுவனங்கள் பெரும்பாலானவை அதிகப்படியான பணிநீக்கம் அறிவிப்புகளை வெளியிட்டது.
பொதுவாக அமெரிக்க டெக் நிறுவனங்களில் இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் அதிகளவில் பணியாற்றி வரும் நிலையில் அதிகப்படியானோர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்தனர்.
அமெரிக்க நிறுவனங்கள்
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்களில் 90 சதவீதம் பேர் ஹெச்1பி விசாவில் தான் பணியாற்றி வருகின்றனர், இந்த நிலையில் ஹெச்1பி விசாவில் பணியை இழந்தவர்கள் அடுத்த 60 நாட்களுக்குள் வேறு பணியைத் தேடிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.
புதிய வேலை
தற்போதைய வர்த்தகச் சந்தையில் புதிய வேலையைக் குறைந்த பட்சம் பழைய சம்பளத்தில் தேடிப் பெறுவது என்பது பெரும் சவாலான காரியம் என்பதால் இந்தியர்களும் பிற வெளிநாட்டு ஹெச்1பி விசா ஊழியர்கள் புதிய வழியைத் தேடியுள்ளனர்.
ஹெச்1பி விசா ஊழியர்கள்
அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கவும், புதிய வேலை அல்லது முயற்சிகளைத் தொடர வேண்டும் என்பதற்காக முதலீட்டு மூலம் கிடைக்கும் குடியுரிமை பெறும் திட்டத்தை இந்தியர்களும் பிற வெளிநாட்டு ஹெச்1பி விசா ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
EB-5 விசா
அமெரிக்காவில் இருக்கும் குடியுரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, கடந்த 2 மாதத்தில் இந்தியர்களும் பிற வெளிநாட்டு ஹெச்1பி விசா ஊழியர்கள் மத்தியில் குறிப்பாக மெட்டா, டிவிட்டர், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் EB-5 முதலீட்டு விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
EB-5 திட்டம்
அமெரிக்க அரசு அளிக்கும் EB-5 திட்டம் மூலம் ஒரு முதலீட்டாளர் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத குழந்தைகள் ஆகியோர் அமெரிக்காவில் கிரீன் கார்டு அதாவது நிரந்தரக் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கத் தகுதியுடையோர்கள்.
முதலீடு, வேலைவாய்ப்பு
EB-5 திட்டம் மூலம் ஒருவர் நிரந்தரக் குடியிருப்பு உரிமையைப் பெற வேண்டுமாயின் அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் தேவையான முதலீடு செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு 10 நிரந்தர முழுநேர வேலைகளை உருவாக்க வேண்டும்.
நிரந்தரக் குடியுரிமை
இந்தப் பிரிவில் இந்தியர் அல்லது பிற வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற்றால் அமெரிக்காவைவிட்டு வெளியேறத் தேவையில்லை, அதேபோல் புதிய வேவைவாய்ப்புகளைத் தேடுவது மட்டும் அல்லாமல் உருவாக்கவும் முடியும்.
ஸ்டார்ட்அப் கனவுகள்
இதைப் பல டெக் ஊழியர்கள் தங்களது ஸ்டார்ட்அப் கனவுகளை நினைவாக்கப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் I-485 விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.
88,000 டெக் ஊழியர்கள்
கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் சுமார் 88,000 டெக் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கட்டாயம் 30 முதல் 45 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த EB5 விசா மூலம் அமெரிக்கச் சந்தையில் கூடுதல் முதலீடுகள் உருவாகும்.