கொரோனாவின் வருகைக்கு பிறகு வழக்கத்திற்கு மாறாக ஐடி துறையானது களை கட்டத் தொடங்கியுள்ளது எனலாம்.
ஏனெனில் வழக்கத்தினை விட பல புதிய ஒப்பந்தங்கள், நல்ல வளர்ச்சி விகிதம், லாப விகிதம் இப்படி நிறுவனங்கள் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளன.
நிறுவனங்கள் பலத்த வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ஊழியர்களை குதூகலப்படுத்தும் விதமாக சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ், சில நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் சம்பள உயர்வு என ஊழியர்களை சந்தோஷப்படுத்தின.
பல லட்சம் பேர் பணியமர்த்தல்
இதற்கிடையில் மற்ற துறைகளில் பல லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஐடி துறையில் அனைவரும் உற்று நோக்கும் விதமாக பல லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டனர். இது தான் நல்ல விஷயம் எனில், இந்த போக்கானது இன்னும் சிறிது காலம் தொடரும் என்றும் நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
தொடர்ந்து வளர்ச்சி பாதையில் ஐடி துறை
இதனை நிரூபிக்கும் விதமாகத் தான் இந்தியாவின் டாப் நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்கள், நடப்பு ஆண்டில் 1.20 லட்சம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் கூறியிருந்தன. இந்த நிலையில் தற்போது நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டெக் மகேந்திராவும், பணியமர்த்தல் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
3 மடங்கு பிரெஷ்ஷர்கள்
இது குறித்து டெக் மகேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு ஆண்டில் 3 மடங்கிற்கும் அதிகமான பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனம் திறன் வாய்ந்த ஊழியர்களை தங்களது ஊழியர் தொகுப்பில் சேர்ப்பதை இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
யார் யார் இலக்கு?
இதனால் செயற்கை நுண்ணறிவு, ஸ்பேஷ் டெக்னாலஜி, இணையம் சம்பந்தமான திறன் வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெக் மகேந்திராவின் நிர்வாக அதிகாரி மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான சிபி குர்னானி பிரெஷ்ஷர்கள் பணியமர்த்தல் என்பது வழக்கத்தினை விட மூன்று மடங்கு அதிகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மொத்தம் எத்தனை பேர்?
டெக் மகேந்திரா கடந்த காலாண்டில் 5,200 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது. இதன் மூலம் அதன் மொத்த எண்ணிக்கையானது 1.26 லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இதே போல மீதமுள்ள இந்த நிதியாண்டில் இந்த பணியமர்த்தலானது தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் கவனம்
அதோடு நடப்பு ஆண்டின் மிகப்பெரிய திறமைகளை வளர்ப்பது நிறுவனத்தின் முக்கிய கவனமாக இருக்கும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இணையம், ஸ்பேஷ் டெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் அதிக கவனம் இருக்கும் என்று குர்னானி தெரிவித்துள்ளார்.
நிகரலாபம்
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 39.2% அதிகரித்து, 1,353 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் வெறும் 972.3 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. டெக் மகேந்திரா மட்டும் அல்ல, இந்த ஜூன் காலாண்டில் பற்பல இந்திய ஐடி நிறுவனங்களும் மாபெரும் வளர்ச்சியினை கண்டுள்ளன.
வருவாய் விகிதம்
அதன் நிலையான நாணய வருவாய் வளர்ச்சி விகிதமானது 3.9% ஆக அதிகரித்துள்ளது. இது வெறும் 2.3% இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல வருவாய் விகிதமானது இந்த காலாண்டில் 7% அதிகரித்து, 10,485 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மாபெரும் நம்பிக்கை
மீதமுள்ள நிதியாண்டில் இந்த வளர்ச்சி விகிதத்தினையும் தாண்டலாம் என நம்பிக்கை உள்ளதாகவும் குர்னானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரவிருக்கும் காலாண்டுகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாய் இருப்பர் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் குர்னானி கூறியுள்ளார்.
கணிப்பை விட உச்சம்
இந்த நிறுவனம் நிபுணர்கள் கணித்ததை விட, லாபம் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் லாபமானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16 - 23% அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அதையெல்லாம் பொய்யாக்கி லாபம் உச்சம் தொட்டுள்ளது.
எபிடா நிலவரம்
டெக் மகேந்திரா நிறுவனத்தின் எபிடா விகிதம் ஜூன் காலாண்டில் 1,876.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1300.5 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே மார்ச் 2021ல் 1948.1 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. அதோடு EBIT மார்ஜின் விகிதமும் 15.2% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 10.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தங்களின் மதிப்பு
டெக் மகேந்திரா நிறுவனம் கடந்த காலாண்டில், 815 மில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபமும் கிட்டதட்ட 43% அதிகரித்துள்ள நிலையில், இதுவும் பங்கு விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
எவ்வளவு ஏற்றம்?
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த பங்கின் விலையானது சுமார் 30% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி ஐடி குறியீடானது 26% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது ஓவர் பாட் லெவலில் இருப்பதால், இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இலக்கு
இந்த பங்கு விலை குறித்து ஜேபி மார்கன் அறிக்கையில், அடுத்த இலக்கு 1250 - 1400 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது எட்டு வருடங்களில் சிறந்த காலாண்டு லாபமாகும். வலுவான ஒப்பந்தங்களுக்கு அடுத்து வரும் காலாண்டுகளிலும் லாபம் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஸ் விகிதம் அதிகரிக்கலாம்
இதனால் இபிஎஸ் (EPS) விகிதம் அடுத்து வரும் காலாண்டுகளில் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்து வரும் ஒவ்வொரு நிதியாண்டிலும் EPS விகிதம் தலா வருடத்திற்கு 3% அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இன்றைய பங்கு விலை
இதற்கிடையில் இன்று என்.எஸ்.இ-யில் இந்த பங்கின் விலையானது சற்று குறைந்து, 1202.90 ரூபாயாக காணப்படுகிறது.
இதே பி.எஸ்.இயில் இந்த பங்கின் விலையானது சற்று குறைந்து, 1203.10 ரூபாயாகவும் காணப்படுகிறது.
இதன் இன்றைய உச்சம் 1218 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 1195.95 ரூபாயாகும். இதே 52 வார உச்சம் 1237 ரூபாயாகும். 52 வார குறைந்த விலை 643 ரூபாயாகும்.