கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக பலதுறைகளும் துவண்டு போன நிலையில், இன்றளவிலும் பல புதிய புராஜக்ட் திட்டங்களோடு வளர்ச்சி பாதையில் உள்ளன. அதோடு தங்களது வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக ஐடி நிறுவனங்கள், தொடர்ந்து பணியமர்த்தலையும் செய்து வருகின்றது.
இது உண்மையில் ஐடி துறை சார்ந்த ஊழியர்களுக்கும், கல்லூரி படிப்பினை முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தற்போது ஐடி துறை பெருகி வரும் வாய்ப்புகள் காரணமாக புதியவர்களுக்கும் (freshers), ஏற்கனவே பணிபுரிந்து வருபவர்களுக்கும் பற்பல புதிய வாய்ப்புகளை கொடுத்து வருகின்றன.
ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டெக் மகேந்திரா இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் புதியதாக 5000 புதியவர்களை (freshers) பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது உண்மையில் ஐடி துறையினருக்கு மிக நல்ல செய்தியே. ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து பணியமர்த்தலை செய்து வருவதற்கு இதுவே முக்கிய சாட்சியாகும்.
கேம்பஸ் மூலம் பணியமர்த்தல்
டெக் மகேந்திரா நிறுவனத்தில் கடந்த டிசம்பர் 31, 2020ன் படி அதன் மொத்த ஊழியர் தொகுப்பில் 1.21 லட்சம் பேர் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மனோஜ் பட், நடப்பு காலாண்டிலேயே கேம்பஸ் இண்டர்வியூக்களை நடத்தி வருகிறோம். இதனை அடுத்த இரண்டு காலாண்டிலும் தொடர திட்டமிட்டுள்ளோம்.
கேம்பஸ் இண்டர்வியூ
இந்த கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சுமார் 5,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆக எல்லா பக்கங்களில் இருந்தும் நாங்கள் நல்ல திறனையும், திறமைகளையும் சேர்க்கிறோம் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதோடு தொடர்ந்து ஆட்டோமேஷன் எங்களது முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அடுத்து வரும் காலாண்டில் வளர்ச்சி
இந்த நிறுவனத்தின் தலைமையகம் டிசம்பர் 31, 2020ல் 9000 பேரினை குறைத்தது. அதன் வணிக செயல்பாடுகளில் பலமான சரிவினை கண்ட நிலையில், இந்த நடவடிக்கை இருந்தது. எனினும் டிசம்பர் காலாண்டில் attrition விகிதம் 12 சதவீதத்தினை கடந்துள்ளது. மக்கள் ஒரு கடினமான நேரத்தினை கடந்து செல்கிறார்கள் என கூறியுள்ளார். எனினும் மார்ச் மற்றும் ஜூன் காலாண்டில் வளர்ச்சி ஏற்படலாம் என்றும் பட் கூறியுள்ளார்.