இந்திய ஐடி துறையில் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் வருமானத்தில் கணிசமான உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில் லாபத்தைப் பெரிய அளவிலான சரிவைக் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் டெக் மஹிந்திரா 1,081.4 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் 1,309.8 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் லாப அளவீட்டில் சுமார் 17.4 சதவீத சரிவை அடைந்துள்ளது.
இதேகாலகட்டத்தில் டெக் மஹிந்திராவின் வருவாய் அளவீடு 9,647.1 கோடி ரூபாயில் இருந்து 9,729.9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வருவாய் அளவில் 0.9 சதவீத வளர்ச்சியை மட்டுமே டெக் மஹிந்திரா பதிவு செய்துள்ளது.
டெக் மஹிந்திராவின் ஐடி சேவை வர்த்தகப் பிரிவில் 8,673 கோடி ரூபாய் வருவாய் உடன் 1 சதவீத வளர்ச்சியும், பிபிஓ சேவை பிரிவின் மூலம் 1,056.9 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்று உள்ளது.
இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான LIC மார்ச் காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு முதலீட்டு அளவை அதிகரித்துள்ளது. இதன் மூலம் மார்ச் காலாண்டுக்கு முன்பு வரையில் எல்ஐசி 2.03 சதவீத டெக் மஹிந்திரா பங்குகளை மட்டுமே வைத்திருந்த நிலையில், மார்ச் காலாண்டு முடிவில் இதன் அளவு 2.64 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
மேலும் இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா பங்குகள் 2.08 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 970.00 ரூபாய் வரையில் உயர்ந்தது.