மகேந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான டெக் மகேந்திரா, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் நிகரலாபத்தில் 5.27 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,064 கோடி ரூபாயாக லாபம் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 1,123.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 9.5 சதவீதம் லாபம் அதிகரித்துள்ளது.
இது கடந்த ஜூன் காலாண்டில் 972.3 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது கவனிக்கதக்கது.
ஸ்பெஷல் டிவிடெண்ட்
இதற்கிடையில் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, ஒரு பங்கிற்கு 15 ரூபாய் டிவிடெண்ட்டினை அறிவித்துள்ளது.
புனேவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், 9,371.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 9,069.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.32% வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலாண்டின் அடிப்படையில் 2.9% அதிகரித்துள்ளது. ஏனெனில் முதல் காலாண்டில் வருவாய் விகிதம் 9,106.3 கோடி ரூபாயாக இருந்தது.
டாலர் மதிப்பில்
இதே டாலர் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் லாபம் 143.7 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 11.5 சதவீதம் அதிகமாகும். இதே போல வருவாய் விகிதம் 4.8 சதவீதம் அதிகரித்து 1,265.4 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் வணிகம்
இது குறித்து டெக் மகேந்திராவின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிபி குர்னானி, இந்த நெருக்கடியான நேரத்திலும் தேவை மீண்டு வருவதால், நாங்கள் புத்துயிர் பெறுகிறோம். டிஜிட்டல் மாற்றத்தின் வேகம், எங்கள் வணிக சூழலை மேம்படுத்த உதவியது என்றும் கூறியுள்ளார்.
இந்த நிறுவனத்தின் EBITDA 30.9 சதவீதம் அதிகரித்து, 1,703 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சரிவில் ஊழியர்கள் எண்ணிக்கை
மதிப்பாய்வு செய்யப்பட்ட இந்த காலாண்டில், டெக் மகேந்திராவின் செயலில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 988 ஆக உள்ளது. இது ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஏழு புதிய வாடிக்கையாளர்களையும் சேர்த்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குனரான இந்த நிறுவனம் செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் 1,24,258 ஊழியர்களை கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 5.5% குறைவாகும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 1,31,522 ஊழியர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.