இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனமான டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்கு விலையானது 10% அதிகரித்துள்ளது.
இது இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 42.91% அதிகரித்துள்ள நிலையில் ஏற்றம் கண்டுள்ளது.
இந்த பங்கின் விலையானது இன்று காலையில் 10% அதிகரித்திருந்த நிலையில், தற்போது என்.எஸ்.இ-யில் 8.06% அதிகரித்து 1218.70 ரூபாயாகவும், இதே பி.எஸ்.இயில் 8.08% அதிகரித்து, 1,220 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
செம லாபம்
டெக் மகேந்திரா நிறுவனம் முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42.91% அதிகரித்து, 1,365.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வருவாய் அதிகரிப்பு மத்தியில், லாப அதிகரிப்பினையும் கண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் 955.6 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூள் கிளப்பிய வருவாய்
இதே கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது லாபம் 25.13% அதிகரித்துள்ளது. இதே ஒருங்கிணைந்த வருவாய் விகிதம் 11.98% அதிகரித்து, 10,197.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இந்த நிறுவனம் 9,106.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாலரின் நிலவரம் என்ன ?
டாலரில் இந்த நிறுவனத்தின் வருவாய் 1,384 டாலர்களாக அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த ஆண்டினை காட்டிலும் 14.6%மும், இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 4.1% அதிகரித்துள்ளது. இதே நிலையான நாணய அடிப்படையில் வருவாய் 3.9% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கணிப்பை விட உச்சம்
நிபுணர்கள் கணித்ததை விட, இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ள நிலையில்,பங்கு விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் லாபமானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16 - 23% அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், அதையெல்லாம் பொய்யாக்கி லாபம் உச்சம் தொட்டுள்ளது.
எபிடா நிலவரம் என்ன?
இதற்கிடையில் டெக் மகேந்திரா நிறுவனத்தின் எபிடா விகிதம் ஜூன் காலாண்டில் 1,876.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1300.5 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே மார்ச் 2021ல் 1948.1 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. அதோடு EBIT மார்ஜின் விகிதமும் 15.2% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 10.1% ஆக இருந்தது. மொத்தத்தில் இந்த பங்கினை வாங்கி வைத்தவர்களுக்கு நல்ல லாபம் தான்.
புதிய ஒப்பந்தங்கள்
பல புதிய ஒப்பந்தங்கள், நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தினை உந்தலாம். இதனால் இனி வரும் காலாண்டிலும் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கலாம். இதனால் இதன் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில் தான் டெக் மகேந்திராவின் பங்கு விலையானது வரலாற்று உச்சம் தொட்டு வருகின்றது.
ஒப்பந்தம் மதிப்பு?
இந்த சாப்ட்வேர் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 815 மில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபமும் கிட்டதட்ட 43% அதிகரித்துள்ள நிலையில், இதுவும் பங்கு விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
எவ்வளவு ஏற்றம்?
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த பங்கின் விலையானது 30% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி ஐடி குறியீடானது 26% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது ஓவர் பாட் லெவலில் இருப்பதால், இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இலக்கு
இந்த பங்கு விலை குறித்து ஜேபி மார்கன் அறிக்கையில், அடுத்த இலக்கு 1250 - 1400 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது எட்டு வருடங்களில் சிறந்த காலாண்டு லாபமாகும். வலுவான ஒப்பந்தங்களுக்கு அடுத்து வரும் காலாண்டுகளிலும் லாபம் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎஸ் விகிதம் அதிகரிக்கலாம்
இதனால் இபிஎஸ் (EPS) விகிதம் அடுத்து வரும் காலாண்டுகளில் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்து வரும் ஒவ்வொரு நிதியாண்டிலும் EPS விகிதம் தலா வருடத்திற்கு 3% அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.