ஒரு காலத்தில் இன்ஜினியரிங் படிப்பிற்கு அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல வீட்டிற்கு ஒரு இன்ஜினியர் என்ற நிலை உருவானது. ஏன் முன்பெல்லாம் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு பெண் தருவோம் என்று சில பெற்றோர்கள் கூறி வந்தனர். அதற்கு ஏற்றார் போல் பல திருமணங்கள் இன்ஜினியரிங் மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காகவே நடந்துள்ளது. அப்படி இருக்கையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட ஒருவரின் பதிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
ரெட்டிட் தளத்தில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், "தயவு செய்து யாரும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகாதீர்கள்! என்று மாணவர்களுக்கு ஒரு பகீரங்க வேண்டுகோளை விடுத்திருந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவர் ஆண்டுக்கு ரூ.35 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறும் ஒருவர். அப்படி இருக்கையில் இவர் ஏன் இவ்வளவு விரக்தியில் பேசுகிறார் என்று தானே நினைக்கிறீர்கள்?
அதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம். வெளியான ரெட்டிட் பதிவில் அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கூறுகையில், யாரும் தயவு செய்து சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகாதீர்கள்! என்னுடைய நண்பர் இரவு பகலாக ஒரு நிறுவனத்திற்கு உழைத்தார். ஆனால் தற்போது அவரையும் நிறுவனம் பணி நீக்கம் செய்யப் போகிறது.

ஏற்கனவே சாப்ட்வேர் இன்ஜினியர்களை மதித்தது போல் தற்போது எந்த நிறுவனமும் அவர்களை மதிப்பதில்லை. எப்போதும் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இன்றைய சூழலில் ஐடி துறை என்பது ஓட்டப் பந்தயமாகவே மாறிவிட்டது. அதோடு சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கான தேவையும் குறைந்து வருகிறது. நீங்கள் ஒரு நிமிடம் தாமதமாக பணிபுரிந்தாலும், உங்களுக்கு பின்னால் வருபவர் உங்களை முந்தி விடுவார் அல்லது நிறுவனமே உங்களை வேலையை விட்டு தூக்கிவிடும்.
அதோடு லட்சக்கணக்கானோர் அதே சாப்ட்வேர் இன்ஜினியர் ரோலுக்காக போட்டி போடும்போது உங்களுடைய திறமையை விட அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும் சூழல் நிலவுகிறது", என்று கூறியிருந்தார்.
2023-ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற அந்த சாப்ட்வேர் இன்ஜினியர், ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுகிறார் என்று முன்பே பார்த்தோம். ஆனால் ஒவ்வொரு வார பணியையும் பயத்துடனே கழிப்பதாக கூறியிருந்தார். எனவே இளம் மாணவர்கள் மருத்துவம், சட்டம் போன்ற வேறு துறைகளைத் தேடுங்கள் என்றும் அந்த ரெட்டிட் பதிவில் கூறியிருந்தார்.
சில காலமாகவே ஐடி துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை குறைத்து வருகின்றன. சமீபத்தில் காக்னிசன்ட் நிறுவனமும் இந்தியாவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே பணிநீக்கத்தை நினைத்து பயந்து கொண்டு இருந்த ஐடி ஊழியர்களுக்கு இவருடைய பதிவு இன்னும் பயத்தை கிளப்பியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்கு ஏற்றார் போல் இணையத்தில் பரவிய சாப்ட்வேர் இன்ஜினியரின் பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியது. தொடர்ந்து சிலர் கமெண்ட் செய்ய தொடங்கினர். அதில் ஒருவர், "நான் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர். இப்போது உங்களுடைய பதிவை படித்துக் கொண்டிருக்கிறேன்" என்று கவலையோடு கமெண்ட் செய்திருந்தார். இன்னொருவர், "இந்தியாவில் யாரும் விரும்பி சாப்ட்வேர் இன்ஜினியர்களாக மாறுவதில்லை. உண்மையிலேயே கட்டாயத்தின் பெயரில் தான் படிக்கிறார்கள்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
வருங்காலத்தில் IT துறையில் இதே போன்ற சூழல் நிலவுமா? அல்லது பணி நீக்கம் குறைந்து அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications