இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருகிறது என்றால் மிகையில்லை.
கொரோனா காலத்தில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குப் புதிய முதலீடுகள் கிடைக்காத நிலையில் முதலீட்டாளர்கள் ஏற்கனவே வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
லாக்டவுன் காலம்
இதற்கு ஏற்றார் போல் லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் சேவைகளின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள காரணத்தால் டிஜிட்டல் சேவை பிரிவுகளில் இருக்கும் டாப் நிறுவனங்களின் வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
ஒருபக்கம் நிதிநிலையிலும், மறுபக்கம் வர்த்தகத்திலும் வலிமை அடைந்துள்ள இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தக விரிவாக்கத்திற்காக 10, 20, 30 வருடங்களாக வர்த்தகத்தில் இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.
டிஜிட்டல் கல்வி துறை
ஆன்லைன் கல்வி சேவைகள் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள வேளையில், இத்துறையில் இந்தியாவின் டாப் நிறுவனமாக விளங்கும் பைஜூஸ் 10 வருடமாக மட்டுமே வர்த்தகத்தில் இருக்கும் வேளையில் 31 வருடமாகக் கல்வி துறையில் இயங்கி வரும் ஆகாஷ் எடுகேஷன் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
டிஜிட்டல் நிதியியல் சேவை துறை
இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவையில் வேகமாக வளரும் 5 வருடப் பழமையான Groww நிறுவனம் 13 வருடமாக இயங்கி வரும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மியூச்சவல் பண்ட் வர்த்தகம் முழுவதையும் சுமார்175 கோடி ரூபாய்க்கு Groww கைப்பற்ற உள்ளது.
Groww நிறுவனம் தற்போது 1.5 கோடி வாடிக்கையாளர்கள் உடன் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. மேலும் இதுவரை இந்நிறுவனம் சுமார் 59 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகப் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கித் துறை
37 வருடமாக இயங்கி வரும் பிஎம்சி வங்கியை NBFC நிறுவனமான சென்ட்ரம் பைனான்ஸ் மற்றும் 3 வருட ஸ்டார்ட்அப் நிறுவனமான பாரத்பே ஆகிய இரு தரப்பும் இணைந்து கைப்பற்ற உள்ளது. இந்தியாவில் பல வங்கிகள் கடன் மோசடியில் சிக்கியுள்ள காரணத்தால் வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎம்சி வங்கிக்குத் தற்போது தீர்வு காணப்பட்டு உள்ளது.
ஆன்லைன் பார்மா துறை
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஆன்லைன் பார்மா துறை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் 10 வருடமாக ஆன்லைன் பார்மா துறையில் இயங்கி வரும் பார்மாஈசி நிறுவனம் 24 வருடமாக இயங்கி வரும் தைரோகேர் நிறுவனத்தைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பெரும் நிறுவனங்கள் குழுமங்கள்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை டிஜிட்டல் தளத்தில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில் ரீடைல் சந்தைக்குள் நுழைய வேண்டும் என நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இருக்கும் பெரும் நிறுவனங்களான டாடா குரூப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிஜிட்டல் துறைக்குள் நுழைய வேண்டும் என டிஜிட்டல் சேவை பிரிவில் இருக்கும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கைப்பற்றி வருகிறது.