தெலங்கானா காவல்துறையின் போலீஸ் கம்ப்யூட்டர் சர்வீசஸ்பிரிவில் துணை காவல் கண்காணிப்பாளராக (DSP) பணியாற்றி வந்த பீம் ரெட்டிக்கு எதிராக, வருமானத்துக்கு மீறிய சொத்துகள் குவித்ததாக தெலங்கானா ஊழல் தடுப்பு பிரிவு (ACB) வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது வருமானத்தை விட பல மடங்கு அதிக சொத்துகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீடு மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் மற்றும் தொழில் தொடர்புடையவர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 16 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பீம் ரெட்டிக்கு தெலங்கானா முதல் பெங்களூர் வரையில் பல இடத்தில் ஏராளமான அசையா சொத்துகள் வைத்திருந்ததிற்கான ஆவணங்கள் அதிகாரிகளின் கையில் சிக்கியுள்ளன. ஹைதராபாத்தின் இப்ராஹிம்பாக் பகுதியில் வில்லா, டெலிகாம் நகர் பகுதியில் தனி வீடு மற்றும் இரண்டு குடியிருப்புகள், கச்சிபௌலி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு, மணிகொண்டாவில் வணிக வளாகத்தில் பங்கு மற்றும் கமர்சியல் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றின் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் தெலாப்பூரில் இரண்டு குடியிருப்புகள், நாகோல், பட்டாஞ்சேரு, மொமின்பேட் உள்ளிட்ட பகுதிகளில் பல காலி மனைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
50 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம்
வீடுகள் மற்றும் வர்த்தக இடங்கள் மட்டுமின்றி, சங்காரெட்டி மாவட்டத்தின் ஜஹீராபாத் பகுதியில் 3.5 ஏக்கர் விவசாய நிலம், கர்நாடகாவில் 6 ஏக்கர் மற்றும் மேலும் தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 38 ஏக்கர் விவசாய நிலம், பெங்களூரு தேவனஹள்ளியில் ஒரு ஏக்கர் நிலம், விகாராபாத் மாவட்ட மொமின்பேட்டில் 2 ஏக்கர் நிலம், முச்சிந்தலா கிராமத்தில் 4.20 ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்ட பல சொத்துகள் இருப்பதாக ACB தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விவசாய நிலங்கள் மட்டும் 50 ஏக்கரைத் தாண்டுவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணம், தங்கம், முதலீடுகளும் சிக்கின
இந்த சோதனையின் போது DSP வீட்டிலிருந்து சுமார் ரூ.3.60 லட்சம் ரொக்கப் பணமும், அவரது பினாமியுடன் தொடர்புடைய இடத்தில் இருந்து மேலும் ரூ.40 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
இதோடு சுமார் 2 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் சுமார் ரூ.19.91 லட்சம் வங்கி இருப்புத் தொகையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், ஒரு கனிம நிறுவனத்தில் ரூ.75 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பதிவு மதிப்பு கணக்கிடப்பட்டாலும், இந்த அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு அதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று ACB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தெலுங்கானாவில் வருமானத்துக்கு மீறி சொத்துகள் சேர்த்த அதிகாரிகள் அடுத்துடுத்து பிடிப்பட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications