உலகிலேயே மிகவும் அதிநவீன எலக்ட்ரிக் காராக விளங்கும் டெஸ்லா கார்கள் இந்தியாவுக்கு விற்பனைக்குக் கொண்டு வர எலான் மஸ்க் பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார். ஆனால் மத்திய அரசு எலான் மஸ்க்-ன் வரிக் குறைப்பு கோரிக்கையை ஏற்காமல் உள்ளது.
இதனால் டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்நிலையில் டிவிட்டரில் எலான் மஸ்க் பதிலுக்குத் தெலுங்கானா தொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சரான KTR பதில் அளித்துள்ளார்.
டிவிட்டரில் கேள்வி
டிவிட்டரில் பிரனாய் பத்தோல் என்பவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும் எனக் கேட்டுள்ளார். இதுபோன்ற கேள்விகள் டிவிட்டரில் கேட்கப்படுவது வழக்கம் தான், ஆனால் முதல் முறையாக எலான் மஸ்க் இந்திய அரசின் பல பிரச்சனைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் டிவீட்
எலான் மஸ்க் தனது டிவிட்டரில் இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்வதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், அரசுடன் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தார்.
KTR டிவீட்
எலான், நான் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர். இந்தியா/தெலுங்கானாவில் கடையை அமைப்பதற்கான சவால்களைச் சமாளிக்க டெஸ்லாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் மாநிலம் இந்தியாவில் ஒரு சிறந்த வணிக இலக்காகவும் உள்ளது என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரி
டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வாக விளங்கும் எலோன் மஸ்க், சமூக ஊடகங்களில் தனது ட்வீட் மூலம் டெஸ்லா கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார், இது முதல் முறை அல்ல என்று ஒரு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
CKD முறை
இந்தியாவில் டெஸ்லா கார்களை வரி சலுகையோடு கொண்டு வர ஒரு சிறப்பான வழி உண்டு. டெஸ்லா கார்களை completely knocked down (CKD) முறையில் அதாவது முழுவதும் பிரிக்கப்பட்ட கார்களாகவும், உதிரிப்பாகங்களை ஜீரோ வரியில் இறக்குமதி செய்து இந்தியாவில் அசம்பிளி தொழிற்சாலையை உருவாக்கி இதன் மூலம் அதிகப்படியான வரி சலுகையைப் பெறலாம் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த அசம்பிளி தொழிற்சாலையைத் தெலுங்கானாவில் அமைப்பதற்காகத் தான் KTR டிவீட் செய்துள்ளார்.