ஹைதராபாத் : தெலுங்கான மாநில பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்ந்து 42வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாத நிலையில் அம்மாநில அரசுக்கு இதுவரை 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கான மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும். இதோடு பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஊழியர்களின் இந்த ஸ்டிரைக்கால் தினசரி நிர்வாகத்திற்கு 2 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஒரு மாதத்தை தாண்டி நீடிக்கும் போராட்டம்
ஒரு மாதத்தையும் தாண்டி நீடித்து வரும் இந்த போராட்டத்தால் சுமார் 200 கோடி ரூபாய் இது வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கான ஸ்டேட் ரோடு டிரான்ஸ்போர்ட் கர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம், தற்போது வரை நீடித்து வரும் நிலையில், தினசரி செயல்பாட்டு இழப்பு 2 கோடி ரூபாயிலிருந்து, 5.5 - 6 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
60% பேருந்துகள் மட்டுமே இயக்கம்
ஊழியர்களின் இந்த போராட்டத்தால், இந்த கார்ப்பரேஷன் தினசரி நஷ்டத்தை கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மொத்த பேருந்துகளில் வெறும் 60 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்குவதாகவும், இதன் மூலம் 10,400 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நஷ்டம் அதிகரித்துள்ளதாகவும் டி.எஸ்.ஆர்.சி.டி லைவ் மிண்டுக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசுடன் இணைக்க முடியாது
தன்னாட்சி நிறுவனத்தினை அரசுடன் இணைக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.ஆர்.சி.டி அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், இந்த நிறுவனம் இது வரை 900 கோடி ரூபாய் அளவிலான இழப்பை சந்தித்துள்ளது. இதில் பெரும்பகுதி எரிபொருள் செலவினங்களே. டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எங்களது கட்டண விலைகள் கடைசியாக கடந்த 2016ல் திருத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
டிக்கெட் விலை ஏற்றம் செய்யவே இல்லை
டிக்கெட் விலையேற்றம் செய்து சுமார் 3.5 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இது வரை டிக்கெட்கள் விலை அதிகரிக்கவில்லை. இந்த நிலையில் டிக்கெட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் டி.எஸ்.ஆர்.டி.சி அதன் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தை ஊதியம் மற்றும் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது. இதுவே இந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாகவும் கருதப்படுகிறது.
சம்பளத்திலும் மாற்றம் இல்லை
மேலும் கடந்த 2015ல் ஊழியர்களின் சம்பளம் திருத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு இதே போல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தான் அதை பெற்றார்கள். ஆனால் தற்போதுள்ள நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் நவம்பர் 5க்குள் பணியில் சேர முதலமைச்சர் ஊழியர்களுக்கு வழங்கிய இறுதி எச்சரிக்கையை மீறிய நிலையில், 400 பேர் மட்டுமே பணிக்கு திரும்பினர். மீதமுள்ளோர் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் பேருந்துகளுக்கு அனுமதி
இந்த நிலையில் பொது பேருந்துகளின் பற்றாக்குறையை போக்க புதியதாக 5,100 தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் ராவ் நவம்பர் 2ம் தேதி கூறியிருந்தார். இதற்கிடையில் பல தற்கொலை சம்பவங்களும் அரகேறிக் கொண்டிருக்கும் நிலையில், ஊழியர்கள் எதிர்பார்த்தது போல சலுகைகள் கிடைக்குமா? மீண்டும் பணிக்கு திரும்புவார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.