டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடுமையான போட்டிக்கு மத்தியில், சமீபத்தில் தான் கட்டணங்களை உயர்த்தின. இதனால் டிசம்பர் காலாண்டில் பல நிறுவனங்களின் அர்பு விகிதங்களும் அதிகரித்துள்ளன.
எனினும் இந்த அதிகரிப்பானது மற்றொரு கட்டண அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த துறை சார்ந்த வல்லுனர்கள், வோடபோன் ஐடியா நிறுவனம் முதலில் இந்த கட்டண அதிகரிப்பினை கொண்டு வரலாம் என்று கூறியுள்ளனர்.
கணிசமான வளர்ச்சி
இந்த கட்டண அதிகரிப்பானது வாய்ஸ் கால் மற்றும் டேட்டாகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த டிசம்பர் காலாண்டில் 4ஜி வாடிக்கையாளர்கள் இணைப்பில் கணிசமான வளர்ச்சியினை கண்டுள்ளன. சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் மற்றும் பார்தி ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பினை செய்தன.
ஏர்டெல்லின் அர்பு விகிதம்
2016ல் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்த ஜியோ நிறுவனமும், 4ஜி சேவையை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அர்பு விகிதம் டிசம்பர் காலாண்டில் 166 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 162 ரூபாயாக இருந்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 135 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியாவின் அர்பு விகிதம்
வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் அர்பு விகிதம் இந்த டிசம்பர் காலாண்டில் 121 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பர் காலாண்டில் 119 ரூபாயாகவும் இருந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டில் 109 ரூபாயாகவும் இருந்துள்ளது.
ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும், வோடபோன் இந்த டிசம்பர் காலாண்டில் 3.6 மில்லியன் 4ஜி வாடிக்கையாளர்களை சேர்த்து, 109.7 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. எனினும் அதிகப்படியான 2ஜி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள்
ஏர்டெல்லின் காலாண்டு முடிவுகளில் 33.8% வளர்ச்சி கண்டு, 4ஜி வாடிக்கையாளர்கள் 165.6 மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் இந்த காலாண்டில் 4ஜி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் அதிகம் பேரை ஈர்த்துள்ளது. 4ஜி வாடிக்கையாளர்கள் இணைப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அர்பு விகிதமும் அதிகரித்துள்ளது. எனினும் விரைவில் மற்றொரு கட்டண அதிகரிப்பும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு காலாண்டுகளில் மட்டும் ஏர்டெல் 42 மில்லியன் 4ஜி வாடிக்கையாளார்களை இணைத்துள்ளது.
ஜியோவின் சலுகைகள்
ஜியோவின் வருகைக்கு பின்னர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பெரும் பின்னடைவை சந்தித்தன என்றே கூறலாம். ஏனெனில் இலவச கால், குறைவான கட்டணத்தில் டேட்டா என பல சலுகைகள் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக போட்டி நிறுவனங்களும் இதே விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.
ஜியோ இணைப்பு விகிதம்
ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் 5.2 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. எனினும் இதற்கு முந்தைய மூன்று காலாண்டுகளில் இந்த நிறுவனம் 7.3 மில்லியன், 10.8 மில்லியன், 17.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது ஜியோ சரிவினை சந்தித்துள்ளதை அறிய முடிகிறது.
கட்டணங்கள் அதிகரிக்கலாம்
எது எப்படியோங்க ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்களது அர்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மற்றொரு கட்டண அதிகரிப்பினை கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தொலைத் தொடர்பு துறையில் கணிசமான பங்கினை வைத்துள்ள ஜியோ நிறுவனமும், கட்டண விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.