2015 - 16 ஆண்டு வரை, ஒரு ஜிபி டேட்டாவுக்கு 100 - 150 ரூபாய் வரை காசு கொடுத்து இருப்போம்.
2016-ம் ஆண்டில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின், இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
இன்று அதே 150 ரூபாய்க்கு, சரியாக சொல்லப் போனால் 149 ரூபாய்க்கு, 24 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ் எம் எஸ், ஜியோ டூ ஜியோ இலவசம் டாக் டைம், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 300 நிமிட டாக் டைம் எனக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது ஜியோ.
கம்பெனிகள் நிகர லாபம்
முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின், ஜியோவுடன் போட்டி போட்டு, விலையைக் குறைத்துக் கொடுத்ததால், ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியாவின் நிகர லாபம், தற்போது பாதாளத்தில் கிடக்கிறது. பி எஸ் இ வலைதள தரவுகள் படி, கடந்த மார்ச் 2016 உடன் நிறைவடைந்த நிதி ஆண்டில், 7,546 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகர நஷ்டத்தைச் சந்தித்து இருக்கின்றன.
பார்தி ஏர்டெல் விவரங்கள் (நிதி ஆண்டு வாரியாக)
மார்ச் 2017-ம் ஆண்டில் 9,925 கோடி ரூபாய் நிகர நஷ்டம்
மார்ச் 2018-ம் ஆண்டில் 79 கோடி ரூபாய் நிகர லாபம்
மார்ச் 2019-ம் ஆண்டில் 1,829 கோடி நிகர நஷ்டம்
மார்ச் 2020-ம் ஆண்டில் 36,088 கோடி ரூபாய் நிகர நஷ்டம் என செம அடி வாங்கி இருக்கின்றன.
வொடாபோன் ஐடியா
2018-ம் ஆண்டில் தான் வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் மெர்ஜர் நிறைவடைந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில், அதாவது 2016-ம் ஆண்டில், பி எஸ் இ தரவுகள் படி, 2,616 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கணக்கு காட்டி இருந்தது ஐடியா. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐடியா நிகர நஷ்டம் காட்டத் தொடங்கிவிட்டது.
பழைய கணக்கு (நிதி ஆண்டு வாரியாக)
மார்ச் 2017-ம் ஆண்டில் 831 கோடி ரூபாய் நிகர நஷ்டம் கண்டது.
மார்ச் 2018-ம் ஆண்டில் 4,780 கோடி ரூபாய் நிகர நஷ்டம்.
வொடாபோன் ஐடியா இணைப்புக்குப் பிறகான முதல் ஆண்டில் (மார்ச் 2019), வொடாபோன் ஐடியா 14,056 கோடி ரூபாய் நிகர நஷ்டம் கண்டது.
சமீபத்தைய மார்ச் 2020-ம் ஆண்டில் 73,131 கோடி ரூபாயை நிகர நஷ்டமாகக் கணக்கு காட்டி இருக்கிறது வொடாபோன் ஐடியா.
ரீசார்ஜ் விலை ஏற்றம்
இப்படி போட்டி போட்டு விலை குறைத்த காலம் போய், கடந்த டிசம்பர் 2019 காலத்தில், ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ஜியோ என மூன்று பேறுமே, தங்களின் பல ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை சுமாரராக 30 - 40 சதவிகிதம் வரை அதிகரித்தார்கள். இந்த விலை ஏற்றமும் போதவில்லை போல. மீண்டும் விலை ஏற்றம் செய்ய இருப்பதாக டெலிகாம் கம்பெனி தலைவர்கள் & நிர்வகிகளே சொல்லி இருக்கிறார்கள்.
ARPU கணக்கு
பொதுவாக டெலிகாம் கம்பெனிகளில், ARPU என ஒரு கணக்கைச் சொல்வார்கள். அதாவது ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கம்பெனிக்கும் வரும் சராசரி வருவாய். அதைத் தான் ஆங்கிலத்தில் Average Revenue Per User - ARPU என்பார்கள். இந்த ARPU-வில் ஏர்டெல் 157 ரூபாயுடன் முதல் இடத்தில் இருக்கிறது. 140 ரூபாயுடன் ஜியோ இரண்டாவது இடத்திலும், 114 ரூபாயுடன் வொடாபோன் ஐடியா 3-வது இடத்திலும் இருக்கிறது. இந்த ARPU-வை அதிகரிக்கத் தான் டெலிகாம் கம்பெனிகள், தற்போது விலை ஏற்றத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
சுனில் மித்தல் ஏர்டெல்
அடுத்த ஆறு மாதங்களில், மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த தயாராகிக் கொள்ளுங்கள் என, கடந்த மாதமே சொல்லி இருந்தார் ஏர்டெல் கம்பெனியின் தலைவர் சுனில் மிட்டல். 160 ரூபாய்க்கு 16 ஜிபி டேட்டா கொடுப்பது கட்டுப்படி ஆகாது எனவும் சொல்லி இருந்தார். அடுத்த 6 மாதங்களில், நாம், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாய் 200 ரூபாயைத் தாண்ட வேண்டும் எனச் சொன்னதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
வொடாபோன் ஐடியா
இப்போது வொடாபோன் ஐடியா (புதிய பிராண்டான VI), நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரவிந்தர் தக்கார் "டெலிகாம் கட்டணங்கள் அதிகரிக்க வேண்டும். அதைச் செய்ய டெலிகாம் கம்பெனிகள் தயாராக இருக்கின்றன" எனச் சொல்லி இருக்கிறார். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால், எப்படியும் இவர்கள் விலையை அதிகரித்து, நம் பர்ஸை பதம் பார்த்து விடுவார்கள் போலிருக்கிறதே? நம் கையில் என்ன இருக்கு!