உலக அளவில் புகழ்பெற்ற தகவல் பகிர்வு செயலியாக டெலிகிராம் (Telegram) செயலி இருக்கிறது. பெரும்பாலானவர்களின் ஸ்மார்ட் போன்களில் டெலிகிராம் செயலி தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வாட்ஸ் அப்புக்கு போட்டியாக பல செயலிகள் வந்து காணாமல் போன நிலையில் டெலிகிராம் மட்டும் தன்னை தக்க வைத்து கொண்டிருக்கிறது.
900 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்களை கொண்டுள்ள டெலிகிராம் செயலி ஒரு ரூபாய் கூட விளம்பரத்திற்காக செலவு செய்யவில்லை. இந்த நிறுவனத்திற்கு என தலைமை அலுவலகம் இல்லை, ஹெச் ஆர் எனப்படும் மனித வள துறை பிரிவும் கூட இல்லை என்பது தான் ஆச்சர்யம். இவ்வளவு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 30 என்றால் நம்பவே முடியவில்லை.

வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், டெலிகிராம் வெறும் 30 முக்கிய ஊழியர்களைக் கொண்டு மட்டுமே இயங்கி ஆச்சர்யம் தருகிறது. 2013ஆம் ஆண்டு பாவெல், நிகோலாவ் துரோவ் ஆகியோரால் தொடங்கப்பட்டது தான் டெலிகிராம் செயலி. 30 இன்ஜினியர்களை கொண்டு செயல்படும் இந்நிறுவனம் தலைமை அலுவலகம், மனித வள துறை என பாரம்பரிய அலுவலக மாடல் இல்லாமல் இயங்குகிறது.
இந்நிறுவனத்தின் பெரும்பாலான பணிகள் தானியங்கி முறையில் நடக்கின்றன. வாடிக்கையாளர் சேவை, சர்வர் பராமரிப்பு மற்றும் ஸ்பேம் தடுப்பு போன்ற வேலைகளை மனிதர்களுக்குப் பதிலாக 'பாட்கள்' (Bots) மற்றும் அதிநவீன மென்பொருள்கள் கவனித்துக்கொள்கின்றன. இங்கே பாரம்பரியமான HR துறை கிடையாது. உலகளாவிய அளவில் கோடிங் போட்டிகளை நடத்துகிறார்கள். அதில் வெற்றி பெறும் மிகச்சிறந்த திறமையாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.
எனவே இங்கே வேலை செய்பவர்களை 'சூப்பர் ஸ்டார்' இன்ஜினியர்கள் என்கின்றனர். இவர்களுக்கு ரிமோட் முறையில் தான் வேலை. மேலாளர்கள் எல்லாம் இல்லை. ஊழியர்கள் அனைவரும் நேரடியாக நிறுவனர் பாவெல் துரோவ் உடன் உரையாட முடியும். இது நிறுவன வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அனைவரும் ரிமோட் முறையில் வேலை செய்வதால் பெரிய அலுவலகங்கள், மின்சாரம், மற்றும் இதர பராமரிப்புச் செலவுகள் மிச்சம்.

குறைவான ஆட்கள் அதிக தொழில்நுட்பம் அதாவது திறமையான ஊழியர்கள், ஆட்டோமேஷன் மற்றும் தேவையற்ற நிர்வாகச் செலவுகளைத் தவிர்த்ததன் மூலம் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட ஒரு மாபெரும் நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது.
முதலில் அரசுகளால் கண்காணிக்க முடியாத ஒரு தகவல் தொடர்பு ஊடகத்தை தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாவெல், நிகோலாவ் துரோவ் டெலிகிராம் செயலியை தொடங்கினார். வாட்ஸ் அப் , பேஸ்புக் போன்றவை எல்லாம் பிரைவசி பிரச்சனையில் சிக்கி கொண்டிருந்த வேளையில் டெலிகிராம் அந்த பிரச்சனையை தீர்த்து வைத்தது. இதுதான் அந்த செயலி வாட்ஸ் அப்புக்கு மாற்றாக வந்து இன்னும் சந்தையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க முக்கிய காரணம்.
குறிப்பாக தீவிர செயல்பாட்டாளர்கள் , அரசு எதிர்ப்பாளர்கள் என பலரும் சுதந்திரமாக தகவல் தொடர்பு மேற்கொள்வதற்கு ஒரு முக்கியமான செயலியாக பல்வேறு நாடுகளிலும் இது தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட வருகிறது. வாட்ஸ் அப் மக்களின் ஆஸ்தான தகவல் தொடர்பு செயலியாக இருந்தாலும் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வருவதில் வாட்ஸ் அப் சற்று மந்தமாகவே இருந்தது. ஆனால் டெலிகிராம் தொடக்கத்திலிருந்து ஒரு கலந்துரையாடலுக்கான செயலியாக மட்டுமல்லாமல் அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலான உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய பெரிய அளவிலான குழுக்களை உருவாக்கலாம் என்ற வசதியை தந்தது.
இது ஒரே சமயத்தில் 2லட்சம் பயனர்களை தொடர்பு கொள்ளும் , தகவல் பரிமாற்றும் வசதியை தந்தது. மேலும் 2 ஜிபி வரையிலான பைல்களை சேமித்து வைத்து எந்த கருவியிலும் எங்கிருந்தாலும் அணுகலாம் என்ற வசதியை தந்தது. மேலும் எம்பிபுரோட்டோ முறையில் இதன் ப்ரோட்டகால் இருப்பதால் குறைவான நெட்வொர்க் இருக்கக்கூடிய இடங்களிலும் இந்த செயலியை நாம் எளிமையாக பயன்படுத்தலாம். அது மட்டும் இல்லாமல் மொபைல் ஃபோன், கணினி, டேப் பல ஒரே நேரத்தில் பல கருசிகளில் பயன்படுத்தும் வசதி முதலில் இதில் தான் கொண்டுவரப்பட்டது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

