எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை நேரடியாகச் செய்யவும், வரும் காலத்தில் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடி இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் அலுவலகத்தைத் துவங்கியது.
அலுவலகத்தைத் துவங்கிப் பல மாதங்கள் ஆன நிலையிலும், டெஸ்லா கார்கள் இன்னமும் விற்பனை சந்தைக்கு வரவில்லை என டெஸ்லா கார் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மத்திய அமைச்சர்களிடம் வரி குறைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கான இறக்குமதி வரியைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும். இதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வர்த்தகம் அதிகரித்து அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறி டெஸ்லா கோரிக்கை வைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவீட்டை அதிகரிக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகளவிலான வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்பது சந்தேகம் தான்.
ஆடம்பர கார் நிறுவனங்கள்
டெஸ்லா மட்டும் அல்லாமல் பிற ஆடம்பர கார் நிறுவனங்களும் வரியைக் குறைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆடம்பர கார் நிறுவனங்கள் அதிக வரி காரணமாகவும், உள்நாட்டு நிறுவனங்களின் போட்டி காரணமாகவும் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
வரி விதிப்பு
தற்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட கார்களின் விலை 40000 டாலருக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் 60 சதவீத வரியும், 40000 டாலருக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரியை தான் டெஸ்லா குறைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
40 சதவீதம் வரி
இந்தியாவில் இந்த வருடம் விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டுள்ள டெஸ்லா நிறுவனம் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு மட்டும் இறக்குமதி வரியை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.