உலகளவில் தானியங்கி எலக்ட்ரிக் கார்கள் பிரபலம் அடைந்து வருவது மட்டும் அல்லாமல் அதிகளவில் மக்களால் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பெரும் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவிற்கு இணையாகச் சீனாவிலும் அதிகளவிலான வர்த்தகத்தை வைத்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் டெஸ்லா கார்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டைப் பாதிக்கும் வகையில் சீன அரசு முக்கியமான உத்தரவை விதித்துள்ளது.
சீன ராணுவம்
சீன ராணுவம் சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா கார்களில் அதிகளவிலான கேமரா இருக்கும் காரணத்தால் அதை வைத்து யார் வேண்டும் என்றாலும் உளவு பார்க்க முடியும் என்று, ராணுவ அலுவலகங்கள், ராணுவ குடியிருப்பு, ராணுவம் தொடர்புடைய எந்த இடத்திலும் டெஸ்லா கார்களை இயக்க கூடாது என்று உத்தரவிட்டது.
எலான் மஸ்க் விளக்கம்
இந்த உத்தரவு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்தார். இந்நிலையிலும் தற்போது மீண்டும் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக ஒரு உத்தரவு வெளியாகியுள்ளது.
சீன அரசு துறைகள்
சீன ராணுவத்தைத் தொடர்ந்து சீன அரசு துறைகள் சில டெஸ்லா கார்களில் அதிகளவிலான கேமரா இருக்கும் காரணத்தால் சீன அரசு அலுவலகங்கள் பகுதியில் பார்க் செய்யவோ, இயக்கவோ கூடாது என அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெஸ்லா கார் பயன்படுத்தத் தடை
இந்த உத்தரவை அறிக்கையாக வெளியிடாமல் இரு முக்கியத் துறைகளின் மேற்பார்வையாளர்களிடம் வாய் மொழியில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சீன அரசு அதிகாரிகள் டெஸ்லா கார் பயன்படுத்த முடியாமல் போகும்.
சீன மக்களுக்குப் பாதிப்பு
மேலும் இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட உள்ளனர் என்பதும் தெரியவில்லை, இதேபோல் சீனாவின் அனைத்து அரசு துறைகளும் இதை நடைமுறைப்படுத்துமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. சீன அரசு அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது.
கிரிப்டோ வர்த்தகத்திற்குத் தடை
சீன அரசு கிரிப்டோ வர்த்தகச் சேவையை அளிக்க நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. இப்புதிய தடை உத்தரவின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், பேமெண்ட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிரிப்டோகரன்சி தொடர்புடைய எந்தச் சேவைகளையும் அளிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.