உலகிலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா, தனது கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது.
ஆனால் இந்திய அரசுக்கு டெஸ்லா கார்களின் இறக்குமதிக்குப் பிற கார்களைப் போலவே வரி விதிக்கும் காரணத்தால் இந்தியாவில் டெஸ்லா கார்களின் விலை 1 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.
இந்த விலை டெஸ்லா கார்களின் விற்பனை வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்பதை உணர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா மத்திய அரசுடன் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் எலான் மஸ்க்-க்கு அரசு அதிகாரி ஒருவர் முக்கியமான ஐடியா-வை தெரிவித்துள்ளார். இதை எலான் மஸ்க் ஏற்பாரா..?
மத்திய அரசும் டெஸ்லாவும்
இதுவரை மத்திய அரசும் டெஸ்லா நிர்வாகமும் செய்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு டெஸ்லா கார்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்கத் தயார் என்றும், இதற்கு டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை வைத்தது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க முடியாது என்று கூறியது.
உதிரிப்பாகங்கள்
இதற்கு மாறாக டெஸ்லா கார்களுக்கான உதிரிப்பாகத்தை இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை மத்திய அரசிடம் வைத்தது டெஸ்லா நிர்வாகம். இந்தத் திட்டத்திற்கும் மோடி அரசு மறுப்பு தெரிவித்த காரணத்தால் இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்யும் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
டிவிட்டர்
இந்த நிலையில் டிவிட்டரில் பிரனாய் பத்தோல் என்பவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து இந்தியாவில் எப்போது டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும் எனக் கேட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க் இதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், அரசுடன் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தார்.
அரசு அதிகாரி
டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வாக விளங்கும் எலோன் மஸ்க், சமூக ஊடகங்களில் தனது ட்வீட் மூலம் டெஸ்லா கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார், இது முதல் முறை அல்ல என்று ஒரு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
CKD முறை
இந்தியாவில் டெஸ்லா கார்களை வரி சலுகையோடு கொண்டு வர ஒரு சிறப்பான வழி உண்டு. டெஸ்லா கார்களை completely knocked down (CKD) முறையில் அதாவது முழுவதும் பிரிக்கப்பட்ட கார்களாகவும், உதிரிப்பாகங்களை ஜீரோ வரியில் இறக்குமதி செய்து இந்தியாவில் அசம்பிளி தொழிற்சாலையை உருவாக்கி இதன் மூலம் அதிகப்படியான வரி சலுகையைப் பெறலாம் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.