உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் என்ற பட்டத்தை இழந்து நிற்கும் டெஸ்லா ஜனவரி 25 ஆம் தனது நிதியியல் முடிவுகளை வெளியிட்டது. இந்த நிதியியல் முடிவுகளைத் தொடர்ந்து டெஸ்லா பங்குகள் சுமார் 12 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்ததுள்ளது.
டெஸ்லா நிதியியல் முடிவுகளை வெளியிட்ட CEO எலான் மஸ்க், 2024 ஆம் ஆண்டில் கார்களின் விலை குறைந்த போதிலும் விற்பனையில் மந்தநிலை இருக்கும் எனவும், கார்களின் விலையைக் குறைத்த காரணத்தால் டெஸ்லாவின் மார்ஜின் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணமாக இருப்பது சீனாவின் எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் தான், குறிப்பாக BYD. அதிநவீன கார்களை உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கும் காரணத்தால் டெஸ்லா விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போது சீனாவில் விற்கப்படும் எலக்ட்ரிக் கார் 35000 டாலருக்கு குறைவான மதிப்புடையது.
ஜனவரி 25 டெஸ்லா நிதியியல் முடிவுகள் மூலம் டெஸ்லா பங்குகள் 12 சதவீதம் வரையில் சரிந்ததன் வாயிலாகச் சுமார் 80 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை டெஸ்லா இழந்துள்ளது. இதன் மூலம் இது மாதத்திற்கான மொத்த சந்தை மூலதன இழப்பு சுமார் 210 பில்லியன் டாலராக உள்ளது.
எலான் மஸ்க் இனியும் காஸ்ட்லி கார்களை மட்டும் தான் தயாரிப்பேன் என்ற நிலையில் இருந்து மாறி 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் டெக்சாஸ் தொழிற்சாலையில் மலிவான, அடுத்த தலைமுறை எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கப்படுவதில் டெஸ்லா கவனம் செலுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு முன்பு 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மலிவு விலை எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டது. டெஸ்லா-வின் இந்த மலிவு விலை எலக்ட்ரிக் கார் தான் அடுத்தப் பெரும் புரட்சியாக இருக்கப் போகிறது.
டெஸ்லா-வின் மார்ஜின் அளவு மோசமான நிலையில் இருந்து படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளதன் விளைவு தான் 25 நாட்களில் 120 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டுக்கான காரணம். நேற்று ஒரு நாளில் மட்டும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர் குறைந்து 204.2 பில்லியன் டாலராக உள்ளது. டெஸ்லாவின் சந்தை மதிப்பு 580.56 பில்லியன் டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications