உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த நாளில் இருந்து டெஸ்லா பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் டெஸ்லா முதலீட்டாளர்கள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் நீண்ட கால முதலீட்டாளர்களும் வெளியேற துவங்கியுள்ளனர்.
இதற்கிடையில் அமெரிக்க டெக் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் டெஸ்லா பங்குகளும் சரிந்துள்ளது. எப்படி டெஸ்லா பங்குகள் எவ்வளவு சரிந்துள்ளது தெரியுமா..?
எலான் மஸ்க்
எலக்ட்ரிக் வாகன தயாரிக்கும் டெஸ்லா-வின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏப்ரல் 4 அன்று ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்ததில் இருந்து டெஸ்லா பங்குகள் சுமார் 31 சதவீதம் சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் எலான் மஸ்க் சொத்து மதிப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு என்ன வருத்தம்?
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு என்ன வருத்தம்? ஏன் டெஸ்லா பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். ட்விட்டர் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் அதிகப்படியான ஈடுபாடு டெஸ்லா மீதான கவனச்சிதறலுக்கான ஆதாரமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
தாமதம்
குறிப்பாக எலக்ட்ரிக் வாகன சந்கை தற்போது அதிகப்படியான போட்டி உருவாகியிருக்கும் நிலையிலும், சைபர் டிரக், டெஸ்லா ரோட்ஸ்டர், டெஸ்லா செமி ஆகியவற்றின் அறிமுகம் ஏற்கனவே அதிகளவிலான தாமதமாகி வரும் நிலையில் டிவிட்டர் போன்ற மாற்றம் அதிகம் தேவைப்படும் நிறுவனத்தைக் கைப்பற்றுவது எலான் மஸ்கிற்குக் கூடுதல் சுமை.
44 பில்லியன் டாலர்
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற 44 பில்லியன் டாலர் பணத்திற்காக எலான் மஸ்க் இதுவரை 8 பில்லியன் டாலர் அளவிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதுவும் டெஸ்லா பங்குகள் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக மாறியுள்ளது.
31 சதவீதம் சரிவு
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்த ஏப்ரல் 4ஆம் தேதி டெஸ்லா பங்குகள் விலை 1145 டாலராக இருந்தது 785 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டெஸ்லா பங்குகள் 31 சதவீதம் சரிந்து ஒரு டிரில்லியன் டாலருக்கு அதிகமாக இருந்த சந்தை மதிப்புத் தற்போது 828 பில்லியன் டாலராக உள்ளது.