டெஸ்லா நிறுவனம் ஆட்டோமொபைல் துறையின் உச்சத்தை அடைந்திருக்கும் ஒரு நிறுவனம். இனி பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உலகின் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் டெஸ்லா நிறுவனத்தின் பாதையில் தான் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியாவில் டெஸ்லா
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்க மத்திய அரசிடம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா கார்களுக்கு வரியை குறைக்கக் கோரிக்கை வைக்கப்பட்ட போது, மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆனால் இந்தியாவில் தொழிற்சாலை துவங்கினால் கட்டாயம் சலுகைகள் வழங்கப்படும் என மறைமுகமாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை துவங்குவதற்கு முதற்கட்ட பணிகளாக 3 இந்திய நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. ஒப்பந்தம் எதுவும் செய்யாத முன்பே இந்த 3 நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முக்கிய ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள்
டெஸ்லா நிறுவனம் தற்போது இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், விண்டு ஷீல்டு, கியர், பிரேக் மற்றும் பவர் சீட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுமட்டும் அல்லாமல் சில நாட்களுக்கு முன்பாக டெஸ்லா நிறுவனத்தின் இந்திய ஊழியர்கள் மற்றும் Automotive Component Manufacturers Association of India (ACMA) அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
3 நிறுவனங்கள்
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா சோனா காம்ஸ்டார், சன்தார் டெக்னாலஜிஸ் மற்றும் பார்த் போர்ஜ் ஆகிய 3 நிறுவனங்களிடம் முக்கியமான எலக்ட்ரானிக், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் உதிரி பாகங்களைத் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியாவுக்கா..? ஏற்றுமதியா..?
இந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியச் சந்தைக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படுகிறதா அல்லது வெளிநாட்டுச் சந்தை வர்த்தகத்திற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதா என்பது குறித்து முழுமையாகத் தெரியவில்லை.
சோனா காம்ஸ்டார் பங்குகள்
டெஸ்லா மற்றும் 3 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது என்ற செய்தி காட்டுத்தீ போலப் பரவிய நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சோனா காம்ஸ்டார் பங்குகள் 478 ரூபாயில் இருந்து 512 ரூபாய் வரையில் உயர்ந்து 6 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சன்தார் டெக்னாலஜிஸ், பார்த் போர்ஜ்
இதைத் தொடர்ந்து சன்தார் டெக்னாலஜிஸ் பங்குகள் 259 ரூபாயில் இருந்து 294.30 ரூபாய் வரையில் உயர்ந்து 15 சதவீதம் அளவிலான உயர்வைப் பதிவு செய்துள்ளது. மேலும் பார்த் போர்ஜ் நிறுவன பங்குகள் 729.40 ரூபாய் அளவீட்டில் இருந்து 775 ரூபாய் வரையில் உயர்ந்து கிட்டதட்ட 6 சதவீதம் வரையிலான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
ஸ்டார்லிங்க் சேவை
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் அடுத்த வருடம் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளார். மேலும் ஸ்டார்லிங்க் சேவை பெறத் தேவையான செயற்கைக்கோள் தொடர்புகொள்ளும் கருவி, ஆண்டெனா, யூசர் டர்மினல் கருவி ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் ஆய்வு
இதற்காக எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் கூட்டணி வைத்துப் பொருட்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தைத் தேடும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தொழிற்சாலை சாத்தியமா..?
எலான் மஸ்க் இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ள காரணத்தால் தன் பாதையில் இருக்கும் அனைத்து தடைகளையும் உடைத்துத் தொடர்ந்து முன்னேறி வருகிறார். ஆனால் எலான் மஸ்க்-ஓ, டெல்லா-வோ இதுவரை இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்பது குறித்துத் தகவல்களை வெளியிடவில்லை.
டெஸ்லா அமெரிக்கா
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஏற்கனவே அமெரிக்காவில் சில தொழிற்சாலைகளை வைத்துள்ள போதிலும், உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் எல்கட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையும் தனியாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
சீனா - ஆசியா, ஜெர்மனி - ஐரோப்பா
இதுமட்டும் அல்லாமல் ஆசிய முழுவதும் ஏற்றுமதி செய்வதற்குச் சீனாவில் மிகப்பெரிய முதலீட்டில் மற்றும் கூட்டணியில் தொழிற்சாலை அமைத்துள்ளது. இதுபோக ஒட்டுமொத்த ஐரோப்பியச் சந்தைக்கும் தேவையான வாகனங்களைத் தயாரிக்க ஜெர்மனியில் தொழிற்சாலையை அமைத்து வருகிறது, இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தித் திறன் அடுத்தச் சில மாதத்தில் முழு அளவீட்டை அடையும்.
இந்தியாவில் புதிய தொழிற்சாலை..?!
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் தொழிற்சாலை என்பது டெஸ்லாவுக்குக் கூடுதல் சுமையாக மட்டும் அல்லாமல் தேவையற்றதாகவும் இருக்கும். இதேபோல் இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கான சந்தை பெரிய அளவில் இல்லை என்பதால் இந்தியாவில் தொழிற்சாலை துவங்கும் பட்சத்தில் உள்நாட்டு சந்தையை விடவும் வெளிநாட்டு சந்தைக்குத் தான் அதிகம் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை வரும்.