அமெரிக்க பெடரல் வங்கி அறிவிப்பு வெளியான அதிர்ச்சியில் டெஸ்லா காலாண்டு முடிவுகள் வெளியிட்ட காரணத்தால் பிற டெக் மற்றும் உற்பத்தி நிறுவனங்களைக் காட்டிலும் டெஸ்லா பங்குகள் கூடுதலாகச் சரிந்தது.
இந்தச் சரிவில் இருந்து வெள்ளிக்கிழமை மீண்டாலும் எலான் மஸ்க்-ன் அறிவிப்பு டெஸ்லா முதலீட்டாளர்கள் முதல் டெஸ்லா விரும்பிகள் வரை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெஸ்லா
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா டிசம்பர் காலாண்டில் 65 சதவீதம் அதிக வருவாய் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் வரலாறு காணாத வகையில் சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
எலான் மஸ்க்
காலாண்டு முடிவுக்குப் பின்பு பேசிய டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், தற்போது நிறுவனம் மொத்தமும் முழுத் தானியங்கி காருக்கான மென்பொருளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் உள்ளது. இந்த மென்பொருளின் வெற்றி உலகளவில் டெஸ்லா கார்களின் விற்பனையை பெரிய அளவில் நம்புவதாகக் கூறினார்.
பட்ஜெட் எலக்ட்ரிக் கார்
இதேபோல் அனைத்து தரப்பினரும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெஸ்லா-வின் 25000 டாலர் மதிப்பிலான பட்ஜெட் எலக்ட்ரிக் கார் 2022ல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எலான் மஸ்க் பட்ஜெட் கார் தயாரிக்கும் திட்டத்தில் இப்போது இறங்கப்போவது இல்லை என உறுதியாக அறிவித்துள்ளார்.
சைபர் டிரக் மற்றும் கனரக வாகனம்
மேலும் புதிய கார் அறிமுகம் செய்தால் தற்போது இருக்கும் வாகனங்களின் உற்பத்தி குறைந்து விடும். இதனால் 2022ல் எந்தப் புதிய கார்களும் அறிமுகம் செய்யப்படப் போவது இல்லை எனத் திட்டவட்டமாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்லாவின் சைபர் டிரக் மற்றும் கனரக வாகனங்கள் வெளியாகாது.
ரோபோ
இதேபோல் இந்த வருடம் எலான் மஸ்க் மனித வடிவிலான ரோபோ தயாரிக்கும் திட்டம் கையில் எடுக்கப்படும் என்றும், இந்த வருடம் வெளியிடப்படும் முக்கியத் தயாரிப்புகளில் இந்த ரோபோ-வும் இடம்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.
டெஸ்லா பங்குகள்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டெஸ்லா பங்குகள் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும் 2.08 சதவீத உயர்வுடன் 846.35 டாலராக உயர்ந்து உள்ளது. ஆனால் புதன்கிழமை வர்த்தகத்தில் 970.09 டாலராக இருந்த டெஸ்லா பங்குகள் வெள்ளிக்கிழமை 804.03 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.