சில வாரங்களாகவே தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியதைப் பார்த்தோம். காரணம் அரசியலில் எந்த ஒரு முன்னனுபவமும் இல்லாமல், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். இன்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு புதியதாக ஒரு கட்சியை தொடங்கி அதில் உள்ள தலைவர் முதல்வராகி இருப்பது தமிழக மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதன் மூலம் விஜய் ஒரு சிறந்த திரை நட்சத்திரங்கள் மட்டும் இன்றி சிறந்த அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கிறார். இதற்கிடையில் தங்களுடைய பெற்றோருக்கு சிறந்த மகனாகவும் இருந்திருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
தாயின் கனவை நிறைவேற்றிய விஜய்: முதல்வர் விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தீவிரமான சாய்பாபா பக்தை. வயது முதிர்வின் காரணமாக ஷோபா அவர்களால் அடிக்கடி ஷீரடி செல்ல முடியாத நிலை. அதற்காக விஜய் சென்னையில் தனது தாயாருக்கென பிரத்யேகமாக ஒரு சாய்பாபா கோவிலைக் கட்டிக் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் விஜய் கட்டிய கோவில்: சென்னையின் கொரட்டூர் பகுதியில் வெங்கடேஸ்வரா நகருக்கு அருகில் தான் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. சாய்பாபா கோவிலின் கும்பாபிஷேக விழா 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு எளிய முறையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
தனது குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே ஒரு சாய்பாபா கோயிலை கட்ட வேண்டும் என்பது விஜய்யின் தாயாருக்கு நீண்ட கால விருப்பமாக இருந்துள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிந்த கையோடு சோபா சந்திரசேகர் பேசுகையில், "எனக்கு நாங்கள் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே சாய்பாபா கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது. என் மகன் அதை எனக்காக செய்துள்ளார். இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் கோவிலுக்கு சென்று நிம்மதியாக தரிசனம் செய்வேன்" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
பிறப்பால் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. கிறிஸ்தவ பின்னணியை கொண்டவர் என்றாலும் எல்லா மதங்களையும் சமமாக மதிப்பவர் விஜய். இவர் பல ஆண்டுகளாக சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னையர் தினம் வந்து விட்டால் போதும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும், இன்ஸ்டாகிராம் போஸ்ட்களிலும் சிலருக்கு தாயார் மீதான அன்பு கரைபுரண்டு ஓடும். ஸ்டேட்டஸ்-இல் மட்டும் அம்மாவைக் கொண்டாடும் பலருக்கு மத்தியில் நிஜ வாழ்க்கையிலும் கொண்டாட வேண்டும் என்பதை உலகறிய செய்திருக்கிறார் விஜய். வெறும் சோசியல் மீடியா பாசத்தோடு நின்றுவிடாமல் உண்மையிலேயே பெற்றோருக்கு என்ன தேவை? என்பதை அறிந்து செய்வதில் தான் உண்மையான அன்பு மறைந்திருக்கிறது!


Click it and Unblock the Notifications