2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மாநிலத்தின் அரசியலையே மாற்றி அமைத்துள்ளது. திமுக, அதிமுக என பாரம்பரிய திராவிட கட்சிகள் பலத்த அடியை வாங்கி இருக்கின்றன. இப்போதான் கட்சி ஆரம்பிச்சாங்க அதுக்குள்ள ஜெயிச்சுடுவாங்களா, எல்லா தொகுதிக்கும் போனாரா, வாக்கு கேட்டாரா என பல விமர்சனங்களையும் அடித்து துவம்சம் செய்திருக்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.
விஜய் அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு கேட்கவே இல்லை. ஏன் பாதி நாட்கள் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லவே இல்லை. பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளுக்கும் போகவில்லை. ஆனாலும் மக்கள் விஜய் எனும் ஒற்றை ஆளுக்காக திரளாக வாக்களித்துள்ளார்கள். விஜய் குறைந்த எண்ணிக்கையிலேயே பிரசாரம் செய்திருந்தாலும் அனைத்து தொகுதிகளிலேயே நானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என கூறினார். அதை தான் மக்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

பெரும்பாலான தொகுதிகளில் தங்கள் தொகுதி தவெக வேட்பாளர் யாரென்றே பலருக்கும் தெரியாது. அப்படியிருந்தும் மக்கள் தங்களது வாக்குகளை தவெக-விற்கு ஊதித் தள்ளியிருக்கிறார்கள். அதாவது விஜய், விசில் சின்னம் என்பது மக்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. அதுவும் மிக குறுகிய காலத்தில் என்பது தான் ஆச்சர்யம்.
தவெகவின் தேர்தல் வியூகமே விஜய் மற்றும் விசில் சின்னம் மட்டும் தான். எந்த தொகுதியிலும் தவெக வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தவில்லை மாறாக விஜய் எனும் நபரை தான் முன்னிலைப்படுத்தியது. அது தான் தற்போது தவெகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
முதல் தலைமுறை வாக்காளர்கள் மட்டுமல்ல, ஏராளமான பெண்கள் ஓட்டும் தவெகவுக்கு சென்றுள்ளது. திமுக, அதிமுகவிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏராளமான வாக்காளர்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். அந்த வகையில் திமுகவின் இரண்டாவது முறை தொடர்ந்து ஆட்சி என்ற கனவு தகர்ந்துவிட்டது, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அதிமுகவின் கனவும் கலைந்துவிட்டது.
இப்படி திரளான மக்கள் தவெகவுக்கு வாக்களிக்க பல காரணங்கள் உண்டு. குறிப்பாக ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் சரமாரியாக விஜய்-இன் தவெகவுக்கு விழுந்திருப்பது தெரிய வருகிறது. இரண்டு பெரும் கட்சிகளின் கூட்டணியை மீறியும் தனியாக நின்று ஒரு கட்சி இத்தனை ஆதரவைப் பெற்றிருக்கிறது. இதை ஒரு விரல் புரட்சி என்றே மக்கள் கூறுகின்றனர். ஆள் பலம், கட்சி பலம், அரசியல் செல்வாக்கு என அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்து போட்டுள்ளார் விஜய்.
திமுக இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி தந்துள்ளது மக்கள் அரசியலில் அனுபவம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு தருவார்கள் என்ற அரசியல் விமர்சகர்களின் கருத்துகளை எல்லாம் தவெக தூக்கி சாப்பிட்டுவிட்டது. இந்தியாவின் அழகே அதன் ஜனநாயகமும் அதன் மக்களும் தான். இவர்கள் எந்த நேரத்தில் எந்த முடிவினை எடுப்பார்கள், யாருக்கு வாய்ப்பு தருவார்கள், யாரின் வாய்ப்பை தட்டி கழிப்பார்கள் என்பதை ஒரு போதும் கணிக்க முடியாது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.


Click it and Unblock the Notifications


