நேற்று இரவு தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பற்றி மக்களிடம் பேசினார்.
அந்த பேச்சின் போதே, இந்தியாவில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லி இருந்தார்.
அதோடு இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார். அதோடு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கொவிட் 19 பொருளாதார டாஸ்க் ஃபோர்ஸை நிதி அமைச்சர் தலைமையில் அமைத்து இருப்பதாகச் சொன்னார்.
கூட்டம்
இன்று (மார்ச் 20, 2020 வெள்ளிக் கிழமை) காலை சுமார் 10.30 மணிக்கு, இந்த கொவிட் 19 பொருளாதார டாஸ்க் ஃபோர்ஸ் கூட இருப்பதாகச் செய்திகள் வெளியானது. அதோடு மத்திய கேபினெட் அமைச்சகங்களும் இன்று காலை 11 மணிக்கு கூட இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. கூடி பேசினார்களா என்கிற செய்தி இதுவரைக் கிடைக்கவில்லை.
உதவித் திட்டங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க, சில உதவித் திட்டங்களைக் (Relief Package) தயார் செய்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. இந்த கொரோனா உதவித் திட்டங்களை, இன்றைய கூட்டத்தில் முடிவு செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
என்ன எல்லாம் இருக்கலாம்
இந்திய சமூகத்தின் அடித்தட்டு மக்களாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பண உதவி (Direct Cash Transfer) செய்யும் திட்டம் இருக்கிறதாம். அதோடு வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களுக்கு இ எம் ஐ கெடு தேதிகளை ஒத்திப் போடுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார்களாம்.
வங்கிக் கடன்
சிறு குறு தொழில் முனைவோர்கள், வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களுக்குச் செலுத்த வேண்டிய இ எம் ஐ-களுக்கான கெடு தேதிகளை ஒத்திக் போட இருக்கிறார்களாம். வங்கிகள் சுமாராக 90 நாட்கள் வரை, இ எம் ஐ-களுக்கான கெடு தேதியை ஒத்திப் போட முடியுமாம். கொரோனாவைக் காரணம் காட்டி, மத்திய அரசு, வங்கிக் கடன்களுக்கான (குறிப்பாக சிறு குறு தொழில் முனைவோர்களுக்கான வங்கிக் கடன்) இ எம் ஐ கெடு தேதிகளை ஒத்திப் போடுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.
வாரா கடன்
பொதுவாக குறிப்பிட்ட தேதிகளில் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தவில்லை என்றால், ஒரு நாள் தாமதமானால் கூட, அவர்களை, கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தாதவர்கள் (Defaulters) பட்டியலில் சேர்த்து விடுவார்கள். 90 நாட்களுக்கு, ஒரு கடனுக்கான பணத்தைச் செலுத்தவில்லை என்றால், அதை வாரா கடனாக அறிவித்துவிடுவார்கள். இந்த 90 நாட்கள் என்கிற வரம்பை 6 மாதமாக அதிகரிக்க இருக்கிறார்களாம்.
வரம்பு அதிகரிக்க திட்டம்
இதுவரை 5 கோடி ரூபாய்க்கு மேல் 10 கோடி ரூபாய்க்குள் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர்களைத் தான் MSME தொழில் முனைவோர்களாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். விரைவில் 100 கோடி ரூபாய் முதலீடுகளுடன் தொடங்கப்படும் தொழில்கள் அனைத்தும் MSME வரம்பிற்குள் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முட்டை & கோழி
பொதுவாக சிக்கன், முட்டை, மீன் போன்ற அசைவ ஐட்டங்களைச் சாப்பிட்டால் கொரோனா வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் மக்கள் அசைவத்தைத் தவிர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனவே கோழி வளர்ப்பு மற்றும் மீன் வளம் சார்ந்த துறைகளுக்கு சிறப்பு உதவித் திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.