பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டு வரும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவுக்கு ஒரு நாளைக்கு 1.17 கோடி ரூபாய் செலவு ஆவது தெரியவந்துள்ளது.
அதெல்லாம் சரி அதென்ன எஸ்பிஜி குழு? இது யாருக்கெல்லாம் போடப்படும். இதற்காக ஆகும் செலவு எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த 1985ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் எஸ்பிஜி படை அமைக்கப்பட்டது.
யாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு?
கடந்த 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் எஸ்பிஜி சட்டத்தில் சிறிய திருத்தமும் கொண்டு வரப்பட்டது. இதில் அனைத்து முன்னாள் பிரதமர்கள் மற்றும் பிரதமரின் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு இதனை மீண்டும் மறுசீராய்வு செய்தது.
திருத்தம்
அதன் படி ஒரு பிரதமர் ஆட்சியில் இருந்து அகன்றபின், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டுக்கு பின் ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து பாதுகாப்பு குறைக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டது.
இதன்படி தான் கடந்த 2019ம் ஆண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த பாதுகாப்பில் இருந்து விலக்கப்பட்டனர்.
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு
கடந்த 2021 - 22 பட்ஜெட்டின் படி பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு 429 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் படி ஒரு நாளை 1.17 கோடி ரூபாயாகும். ஒரு மணி நேரத்திக்கு ஆகும் செலவு 4.86 லட்சம் ரூபாயாகும்.
எஸ்பிஜி செலவானது கடந்த 2018 - 19ல் 385 கோடி ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் 2019 - 20ல் 535 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் பின்னர் 2020 - 21ல் 592 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2021 - 22 பட்ஜெட்டில் 429.05 கோடி ரூபாயாக ஒதுக்கீடு குறைந்துள்ளது.
எத்தனை பேர்?
தற்போதைய நிலவரப்படி, இந்த எஸ்பிஜி பாதுகாப்பில் பிரதமர் மோடி மட்டுமே உள்ளார். இதற்கிடையில் இந்த எஸ்பிஜி பனியில் சுமார் 3,000 பேர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப்பில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் மூன்று விவசாய சட்டங்களும் மத்திய பாஜக அரசால் திரும்ப பெறப்பட்டு விட்டது. விவசாயிகளும் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டனர்.எனினும் விவசாயிகளின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவடையவில்லை.
பாதுகாப்பில் பிரச்சனையா?
இதற்கிடையில் தான் பஞ்சாப்பில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவிருந்தார். இந்த நிலையில் தான் அவரின் காரை நிறுத்த போராட்ட காரர்கள் காத்திருப்பதும், இதன் காரணமாக 15 - 20 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே இது அமைந்துள்ளதாக பெரும் சர்ர்சை வெடித்துள்ளது. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்க்கு மத்தியில் தான் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு ஆகும் செலவு, அது குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.