கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பெற்று வருகின்றன என்பதும் வித்தியாசமான முறையில் முதலீடுகள் செய்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நல்ல லாபத்துடன் இயங்கும் வழியை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக ஓடிடி படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்டர் இன்வெஸ்ட்
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான பெட்டர் இன்வெஸ்ட் என்ற நிறுவனம் புதிய ஐடியா ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தை தொடங்கிய வி.எஸ்.பிரதீப் ஒடிடி நிறுவனங்களுக்காக திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கி வருகிறார்.
ஓடிடி தயாரிப்பாளர்களுக்கு கடன்
தற்போது திரைப்படங்கள் போலவே ஓடிடி பிளாட்பாரத்திற்காக அதிக திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் தயாராகி வருகின்றன. ஆனால் ஓடிடிக்காக தயாரிக்கப்படும் தயாரிப்பாளர்களுக்கு உடனடியாக ஓடிடி நிறுவனம் பணம் தருவதில்லை. ஓடிடியில் வெளியாகி 60 முதல் 120 நாட்கள் கழித்த பின்னரே பணம் தருகின்றன. அந்த வகையில் ஓடிடி தயாரிப்பாளர்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்ட பெட்டர் இன்வெஸ்ட் நிறுவனம், ஓடிடி தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கி வருகிறது.
வி.எஸ்.பிரதீப்
இந்நிறுவனத்தின் நிறுவனர் வி.எஸ்.பிரதீப் அவர்களுக்கு சினிமாவில் இருக்கும் நண்பர்கள் சிலர் இந்த ஐடியாவை கொடுத்த நிலையில் அவர் ஓடிடி நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்துள்ளார். அந்த நிறுவனம் தான் பெட்டர் இன்வெஸ்ட் என்பதும், தற்போது இந்த நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
ஓடிடி நிறுவனங்களுக்காக படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கடன் தரும்போது எந்த ஓடிடி நிறுவனத்திற்காக அவர் படம் தயாரிக்கின்றாரோ, அந்த ஓடிடி நிறுவனம் அந்த படத்திற்கு தரும் பணம் பெட்டர் இன்வெஸ்ட் நிறுவனத்திற்கு நேரடியாக கொடுக்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.
புதிய ஐடியா
ஓடிடி நிறுவனம் தரும் பணம் கைக்கு வந்தவுடன் தயாரிப்பாளருக்கு கொடுத்த கடன்தொகை மற்றும் வட்டியை எடுத்துக்கொண்டு மீதியை தயாரிப்பாளரிடம் இந்நிறுவனம் கொடுத்து விடுகிறது. இதுதான் இந்த நிறுவனத்தின் புதிய ஐடியா ஆகும்.
20 ஊழியர்கள்
வி.எஸ்.பிரதீப் இயக்குனராகவும் அவருடைய நண்பர்கள் சேதுமணிகண்டன் மற்றும் ஸ்ரீராம் ஆகியவர்கள் இணை இயக்குனர்களாகவும் இருக்கும் பெட்டர் இன்வெஸ்ட் நிறுவனத்தில் தற்போது 20 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நல்ல எதிர்காலம்
2020 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஓடிடி நிறுவனங்களுக்காக திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகமாகும் என்பதால் ஓடிடிக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால் எங்கள் நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என விஎஸ் பிரதீப் கூறியுள்ளார்.
நடிகர் கதிர் முதலீடு
ஓடிடிக்காக படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் கடன் வழங்குவதை அதிகப்படுத்த வேண்டியுள்ளதால் எங்களுடைய முதலீட்டையும் நாங்கள் அதிகமாக்கி வருகிறோம் என்றும், எங்களது நிறுவனத்தில் நடிகர் கதிர் உள்பட சில சினிமா பிரபலங்களும் முதலீடு செய்திருப்பதாகவும் வி.எஸ்.பிரதீப் கூறியுள்ளார்.
வளர்ச்சி
இந்தியாவிலேயே முதல் முறையாக ஓடிடி திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.