இந்தியா பொருளாதாரம் பல வருடங்களாகத் தொடர்ந்து மோசமான நிலையை எதிர்கொண்டு வரும் வேளையில், கொரோனா பாதிப்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையின் வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களுக்காகவும், பணப்புழக்கத்திற்காகவும் பல்வேறு வழிகளில் நிதி திரட்டி வருகிறது. இதில் குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில், அரசு கடன் அளவுகள் 30 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது என ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நிதி அல்லாத துறை
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அரசாங்கத்தின் நிதி அல்லாத (Non Financial Sector) துறை சார்ந்த கடன் அளவீடு எப்போதும் இல்லாத அளவிற்கு 322 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது 2021ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு இந்திய ஜிடிபி அளவீட்டில் இது 167.3 சதவீதமாகும்.
கடந்த நிதியாண்டில் இதேகாலாண்டில் இதன் அளவு 153 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வறிக்கை
நிதி அல்லாத (Non Financial Sector) துறை சார்ந்த கடன் அளவீடு கடந்த நிதியாண்டை விடவும் 9.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் நாட்டின் மொத்த ஜிடிபி அளவீடு கடந்த வருடத்தை விடவும் 0.6 சதவீதம் சரிந்துள்ளது.
இதன் எதிரொலியாகவே தற்போது நிதி அல்லாத (Non Financial Sector) துறை சார்ந்த கடன் அளவு மற்றும் ஜிடிபி மத்தியிலான விகித அளவீடு முதல் காலாண்டில் அதிகளவில் அதிகரித்துள்ளது என மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
30 காலாண்டு
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி அல்லாத (Non Financial Sector) துறை சார்ந்த கடன் அளவீடு கடந்த வருடத்தை விடவும் 14.3 சதவீதம் வளர்ச்சி அடைந்து 30 காலாண்டு உயர்வை அடைந்துள்ளது.
இதேபோல் அரசு அல்லாத நிதி அல்லாத துறை (Non Government Non financial - NGNF) சார்ந்த கடன் அளவீடு கடந்த வருடத்தை விடவும் 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
வீட்டுச் சேவை கடன்
NGNF பிரிவில் household கடன் பிரிவில் கடன் அளவில் வரலாறு காணாத விதகமாக வெறும் 6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 2020 நிதியாண்டின் 4வது காலாண்டில் கூட இப்பிரிவு கடன் 8.9 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தது.
இந்த வெறும் 6 சதவீத வளர்ச்சி நாட்டில் மக்களின் நிலையைத் தெளிவாக உணர்த்துகிறது.
கார்பரேட் கடன்
இதேபோல் நிதி அல்லாத துறை சார்ந்த கார்ப்பரேட் கடன் வெறும் 3.7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, 2020 நிதியாண்டின் 4வது காலாண்டில் இது வெறும் 1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு
கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் வர்த்தக வீழ்ச்சியின் காரணமாக வளர்ச்சி அடைய வேண்டிய வீட்டு சேவைக்கடன் மற்றும் கார்ப்பரேட் கடன் அளவீடுகள் கடந்த காலாண்டுகளை விடவும் சரிந்துள்ளது. ஆனால் அரசாங்க கடன் அளவுகள் அதிகரித்துள்ளது.
இந்திய வர்த்தகச் சந்தை மீண்டு வரும் வரையில் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர முடியாது. இதன் பின்பே கடன் மற்றும் ஜிடிபி மத்தியிலான வித்தியாசம் குறையும்.