26 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஜிடிபி மற்றும் உலகின் 3ல் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட ஆசிய பசிபிக் பகுதியில் இருக்கும் 15 நாடுகள் இணைந்து கையெழுத்திட்ட ஒரு மாபெரும் சர்வதேச வர்த்தகம் ஒப்பந்தம் தான் இந்த RCEP எனப்படும் Regional Comprehensive Economic Partnership ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தம் மூலம் ASEAN அமைப்பில் இருக்கும் நாடுகள் மற்றும் ஃப்ரி டிரேட் ஒப்பந்தம் கூட்டாளி நாடுகள் இணைந்து, அனைத்துத் தரப்பு வர்த்தக நாடுகளுக்கும் லாபம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஒரு வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சி தான் இந்த RCEP ஒப்பந்தம்.
இந்த மாபெரும் ஒப்பந்தம் நவம்பர் 15ஆம் தேதி ASEAN அமைப்பில் இருக்கும் 16 நாடுகள் முன்னிலையில் கையெழுத்தான நிலையில், இந்தியா மட்டும் விலகிக்கொண்டது. இதனால் மீதமுள்ள 15 நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒன்றிணைந்துள்ளது.
16 நாடுகள்
RCEP ஒப்பந்தம் குறித்த விவாதம் மற்றும் ஆலோசனை 2012ல் கம்போடியாவில் நடந்த 21வது ASEAN மாநாட்டில் துவங்கியது. இந்த ஒப்பந்தம் மூலம் ASEAN குழுவில் இருக்கும் 10 நாடுகளும் (புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லோவாஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) ஃப்ரி டிரேட் ஒப்பந்த கூட்டாளி நாடுகளும் ( ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் நியூசிலாந்து) மத்தியில் இணைப்பை உருவாக்க வேண்டும் எனத் துவங்கப்பட்டது.
இந்த மாபெரும் ஒப்பந்தத்தில் இருந்து தான் இந்தியா விலகியுள்ளது.
இந்தியா விலகியது ஏன்..?
இந்த ஒப்பந்தத்தில் இணைய இந்தியா சில கோரிக்கைகளை முன்வைத்தது. இதற்கு RCEP ஒப்பந்தக்குழு தீர்வுகளை தராத நிலையில் அந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியுள்ளது.
ஒவ்வொரு நாடுகள் மத்தியில் இருக்கும் கட்டண வித்தியாசம், வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் சேவைகளுக்கான திறப்பு ஆகிய பிரச்சனைகளை முன்வைத்தது. இதற்கு RCEP குழு பதில் அளிக்காத நிலையில் இந்தியா விலகியுள்ளது.
இறக்குமதி கட்டணம்
இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 80 முதல் 90 சதவீத சேவை, சரக்கு மற்றும் முதலீடுகளின் இறக்குமதி வரி பெரிய அளவில் குறைக்கப்படும். இந்தியா போன்ற மாபெரும் வர்த்தகச் சந்தை கொண்ட நாடுகளில் இறக்குமதி குறைக்கப்பட்டால் சீனா போன்ற நாடுகள் அதிகளவிலான பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்து இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை பெரிய அளவில் அதிகரிக்கும்.
இதேபோல் பிற நாடுகளுடனும் இந்தியா பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
2014 முதல்..
இதேபோல் இந்தியா RCEP ஒப்பந்தத்தில் MFN (Most Favoured Nation) இல்லாததும், கட்டண குறைப்பு பெரிய அளவிலான பாதிப்பை உருவாக்கும் என 2014 முதல் RCEP ஒப்பந்தக்குழுவுடன் விவாதம் செய்து வரும் நிலையில், இந்தப் பிரச்சனைக்கும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்தியா
கொரோனா பிரச்சனையின் காரணமாக ஆசியச் சந்தையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மோசமான நிலையில் இருக்கும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்தியா தனது உள்நாட்டுத் தொழிற்துறையை மேம்படுத்தி self-reliant கனவை நினைவாக்க முடிவு எடுத்துள்ளது.
முக்கியத் துறைகள்
பால், விவசாயம், எஃகு, பிளாஸ்டிக், செம்பு, அலுமினியம், இயந்திர கருவிகள், காகிதம், வாகனங்கள், கெமிக்கல் மற்றும் இன்னும் பல துறைகள் RCEP ஒப்பந்தம் மூலம் ஏற்படும் இறக்குமதி வரி மாற்றங்கள் உள்நாட்டு உற்பத்தியையும், வர்த்தகத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளது.
இந்த RCEP ஒப்பந்தம் மூலம் 15 நாடுகளில் இருந்தும் குறைவான விலை சேவைகளும், சரக்கும் வரும் காரணத்தால் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
RCEP ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா தற்போது விலகினாலும், பிரச்சனைகளைத் தீர்க்கும் பட்சத்தில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் சேர தயாராக உள்ளது என அறிவித்துள்ளது.
மேலும் RCEP ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய காரணத்தால் ASEAN நாடுகள் உடனான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு.