இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி, கடந்த ஜூன் 2020 காலாண்டில் (2020 - 21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில்), 23.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த, ஆர்பிஐ தன் பங்குக்கு, வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து இருக்கிறது.
மேற்கொண்டு வட்டி விகிதங்கள் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க, பணக் கொள்கைக் கூட்டத்தை (Monetary Policy Meet) நடத்த வேண்டும். ஆனால் தற்போது நடக்க வேண்டிய கூட்டத்தை ஒத்திப் போட்டு இருக்கிறது ஆர்பிஐ.
கமிட்டி அமைப்பு
2016-ம் ஆண்டில், மத்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் படி, பணக் கொள்கைக் கமிட்டி (Monetary Policy Committee) அமைக்கப்பட்டது. அன்றில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மத்திய ரிசர்வ் வங்கி, தன் பணக் கொள்கைக் கூட்டத்தை சரியாக நடத்தி வந்தது.
முதல் முறை
இந்த முறை, 2020 செப் 29, செப் 30, அக் 01 ஆகிய தேதிகளில் நடைபெற வேண்டிய பணக் கொள்கைக் கூட்டம், ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஆர்பிஐயின் பணக் கொள்கைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறது தி இந்து பத்திரிகை.
நான்கு பேர் தேவை
ஆர்பிஐயின், இந்த பணக் கொள்கைக் கமிட்டியில், மொத்தம் 6 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பணக் கொள்கைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 4 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். ஆனால் அக்டோபர் 01-ம் தேதி, ஆர்பிஐயின் பணக் கொள்கை கமிட்டியில், 3 உறுப்பினர்கள் தான் இருப்பார்கள். மற்ற 3 உறுப்பினர்களுக்கான காலம், செப்டம்பர் 30 உடன் நிறைவடைகிறது. எனவே கூட்டத்தை கூட்ட முடியாத சூழலில் சிக்கி இருக்கிறது ஆர்பிஐ.
மீண்டும் நியமிக்கப்பட முடியாது
சேத்தன் கதே (Chetan Ghate) இந்திய புள்ளியியல் இன்ஸ்டிட்யூட்டில் பேராசிரியராக இருக்கிறார். பமி துவா (Pami Dua) டெல்லி பொருளாதாரக் கல்லூரியில் இயக்குநராக இருக்கிறார். ரவிந்த்ரா தொலாக்கியா, ஐஐஎம் அஹமதாபாத்தில் பேராசிரியராக இருக்கிறார். அரசால் நியமிக்கப்பட்ட இந்த மூன்று பேரும், தற்போது ஆர்பிஐயின் பணக் கொள்கை கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார்கள். இவர்களின் காலம் 30 செப் 2020 உடன் நிறைவடைகிறது. இவர்கள், மீண்டும் ஆர்பிஐயின் பணக் கொள்கை கமிட்டியில் உறுப்பினராக முடியாதாம்.
ஆர்பிஐ
சில மாதங்களுக்கு முன்பே, ஆர்பிஐ, தன் பணக் கொள்கை கமிட்டியில் இருக்கும், அரசு நியமித்த 3 உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாறாக புதிய உறுப்பினர்களை நியமிக்க, மத்திய பொருளாதார விவகாரத் துறைச் செயலர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இதுவரை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
அரசுக்கே நெருக்கடியாகிவிடும்
எனவே 2020 செப் 29 - 2020 அக் 01 வரை நடைபெற வேண்டிய ஆர்பிஐயின் பணக் கொள்கைக் கூட்டம், தேதி குறிப்பிடாமல், ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரம் பலமாக அடி வாங்கி இருக்கும் இந்த நேரத்தில் கூட, பணக் கொள்கை கூட்டம் போன்ற முக்கியமான கூட்டங்களை நடத்த முடியவில்லை என்றால், அது அரசுக்கே பெரிய நெருக்கடியை உருவாக்கிவிடும். இதை அரசு புரிந்து கொண்டு விரைந்து செயல்படும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications