கொரோனா காலகட்டத்தில் நாட்டில் பல லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வாடிய நிலையில், அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கூட கஷ்டப்படும் நிலைக்கு பலரும் சென்றது மறுக்கமுடியா உண்மையே.
ஆனால் அப்படி ஒரு இக்கட்டாண காலகட்டத்திலும் கூட ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பாத்தியம் சாத்தியமா? என்றால் நிச்சயம் சாத்தியம் தான் என்கிறது ஒரு அறிக்கை. சுருக்குமாக சிவாஜி படத்தில் ரஜினி சொல்லவது போல் பணக்காரனை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் மாற்றியுள்ளது இந்த கொரோனா வைரஸ்.
இது குறித்து சமீபத்தில் ஆக்ஸ்பாம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. சமத்துவமின்மை வைரஸ் என்ற தலைப்பில் வெளியான அந்தறிக்கையின் படி, கொரோனா காலகட்டத்தில் முகேஷ் அம்பானியின் ஒரு நொடி வருமானத்தினை, ஒரு சாதாரண முறைசாரா தொழிலாளி சம்பாதிக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் அந்தறிக்கை அது சுட்டிகாட்டியுள்ளது.
கொரோனா காலத்தில் வருமானம்
கொரோனா காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில், சம்பாதித்த தொகையை, ஒரு சாதாரண முறைசாரா தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகள் ஆகலாம் என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியுள்ளது. அதோடு இந்தியாவில் சுமார் 24 சதவீதம் மக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாதத்திற்கு வெறும் 3,000 ரூபாய் என்ற அளவில் தான் வருமானம் சம்பாதித்ததாக கூறுகிறது.
வறுமையை போக்க முடியும்
இதில் கவனிகக்தக்க விஷயம் என்னவெனில், 40 கோடி முறைசாரா தொழிலாளர்களின் வறுமையை குறைந்தது ஐந்து மாதங்களாவது போக்க, முகேஷ் அம்பானியின் சொத்து மட்டும் போதுமானதாக இருக்கும் என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கையில் தெரிவித்தது. இந்த தொற்றுநோய் காலகட்டத்தில் அம்பானி சம்பாதித்த தொகையானது, 40 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்களை, குறைந்த 5 மாதங்களாவது வறுமையில் தள்ளும் என்றும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
ஏழை பணக்காரர் இடைவெளி
ஆக்ஸ்பாமின் இந்த அறிக்கை, கொரோனா பெருந்தொற்று காலத்தில், தொற்றுநோய் எவ்வாறு பணக்காரர்களுக்கும் ஏழ்மையான மக்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளது.
சொத்து மதிப்பு அதிகரிப்பு
அதோடு இந்தியாவின் முதல் நூறு பில்லியனர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 35% அதிகரித்துள்ளதாகவும், இதே சொத்து மதிப்பு 12,97,822 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தொகையானது நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாகும்.
ஏழைகளுக்கு கொடுத்தால்?
இந்த தொகையை 13.8 கோடி ஏழை மக்களுக்கு செக்காக கொடுக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் தலா 94,045 ரூபாய் கொடுக்கலாம் என சுட்டிக் காட்டியுள்ளது. இந்தியாவில் முதல் 11 பில்லியனர்கள் தொற்று நோயின்போது, அவர்களின் சொத்து மதிப்பிற்கு 1% வரி செலுத்தியிருந்தாலும், ஜான் ஆஷாதி திட்டத்தின் ஒதுக்கீட்டை 140 மடங்கு அதிகரிக்க போதுமானதாக இருக்கும், இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்கிவரும் ஒரு திட்டமாகும்.
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கியது
ஆக இந்த கொரோனா பணக்காரர்களை மேற்கொண்டு பணக்காரர் ஆகியது. ஏழைகளை மேலும் மிக ஏழ்மையாக்கியது ஆக்கியது. அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதத்தினை ஏற்படுத்தியதாகவும் முன்னதாக இந்திய டுடே தனது செய்தியில் ஒரு முறை கூறியிருந்தது.
பல பில்லியனர்கள்
மேற்கண்ட இந்த ஆக்ஸ்பாம் லிஸ்டில் முகேஷ் அம்பானி மட்டும் அல்ல, அவரை தொடர்ந்து கவுதம் அதானி, சிவ் நாடார், சைரஸ் பூனவல்லா, உதய் கோட்டக், அசிம் பிரேம்ஜி, சுனில் மிட்டல், ராதாகிஷன் தமனி, குமார் மங்கலம் பிர்லா, லஷ்மி மிட்டல் போன்றோரின் சொத்து மதிப்பும் கடந்த மார்ச் 2020ல் இருந்து அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
ஏழைகள் மேலும் ஏழ்மைக்கே தள்ளப்பட்டனர்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மணி நேரமும் 1,70,000 பேர் வேலை இழந்தததாக தரவு காட்டுகின்றது. ஆக இதுவும் கொரோனா காலகட்டத்தில் ஏழைகள் இன்னும் ஏழ்மை நிலையை அடைந்ததையே இதுவும் சுட்டிக் காட்டுகின்றது. அதோடு இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டும் சுமார் 12.2 கோடி பேர் தங்களது வேலையினை இழந்துள்ளதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. இதில் 75% பேர் அதாவது 9.2 கோடி பேர் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக கொரோனாவின் ஆரம்ப காலகட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது இந்த முறைசாரா தொழிலாளர்கள் தான் என்கிறது இந்த அறிக்கை.