இந்தியாவையே உலுக்கிய சத்யம் நிறுவனம்.. நியாபம் இருக்கா..? ரூ.7,000 கோடி மோசடி செய்த ராமலிங்க ராஜு

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் (Satyam Computer Services Ltd.) என்பது 1987ஆம் ஆண்டு பி. ராமலிங்க ராஜு என்பவரால் நிறுவப்பட்ட ஒரு இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனம். இந்த நிறுவனம், 1990களிலும், 2000களிலும் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. சாப்ட்வேர் டெவலப்மென்ட், பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங் (BPO), மற்றும் தகவல் தொழில்நுட்பக் கன்சல்டிங் ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தது. உலகளாவிய நிறுவனங்கள் உட்பட, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் வாடிக்கையாளர்களாக இருந்தது.

இந்நிலையில் தான், கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பி. ராமலிங்க ராஜு, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு கடிதத்தை எழுதினார். அது ஒரு சாதாரண கடிதம் போல இருந்தாலும், அதில் எழுதியிருந்தது ஒரு வெடிகுண்டை போல் வெடித்தது. அது ஒரு ஒப்புதல் கடிதம் ஆகும். அதில், "நான் நிறுவனத்தின் கணக்குகளில் பல ஆண்டுகளாக மோசடி செய்து வந்தேன்" என பி.ராமலிங்க ராஜூ எழுதியிருந்தார். அதாவது, சுமார் ₹7,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக ராஜு எழுதிய கடிதம் வெளியான உடனே, இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய நிறுவன மோசடியாக இது கருதப்பட்டது.

இந்தியாவையே உலுக்கிய சத்யம் நிறுவனம்.. நியாபம் இருக்கா..? ரூ.7,000 கோடி மோசடி செய்த ராமலிங்க ராஜு

ஒரு காலத்தில், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் இந்தியாவின் ஐ.டி. துறையில் மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது. உலகின் முன்னணி Fortune 500 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினர். அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. இதன் நிறுவனர் பி. ராமலிங்க ராஜு, வணிக உலகின் "ஹீரோ"வாக உயர்ந்தார். Ernst & Young Entrepreneur of the Year என்ற விருதையும் அவர் பெற்றிருந்தார். டாவோஸ் போன்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று பேசும் அளவுக்கு புகழ் பெற்றார். ஆனால், இந்த வெற்றியின் பின்னால் இருந்தது எல்லாம் ஒரு முகமூடி. வெளிப்புற தோற்றத்தில் சத்யம் நிறுவனம் வலிமையாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருந்தாலும், உண்மையில் அது வெறும் ஒட்டுப் போட்டுக் கட்டப்பட்ட மாளிகை போன்றதாக இருந்தது.

அதாவது, உண்மையான வளர்ச்சியும், பணச்சுழற்சியும் இல்லாமல் கணக்குகளை போலியாக காட்டி வெற்றியின் தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தனர். பின்னர், அந்த முகமூடி விலகியதும், இது தான் இந்திய வர்த்தக வரலாற்றில் மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இந்த மோசடி முதலில் சிறிய அளவில் தான் ஆரம்பித்தது. ஆனால், நிறுவனத்தின் மதிப்பு (valuation) உயரத் தொடங்கியதும், அந்த பொய்யை அப்படியே தொடர வேண்டிய கட்டாயம் ராமலிங்க ராஜுவுக்கு ஏற்பட்டது. மார்க்கெட்டின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, ஒவ்வொரு காலாண்டிலும் பொய்யான லாபங்களை கணக்கில் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக பொய்யான வங்கி இருப்புகள் உருவாக்கப்பட்டன. ஆடிட்டர் அறிக்கைகள் (auditor statements) போலியாக எழுதப்பட்டன. ஆனால், காலம் செல்ல செல்ல நிறுவனத்தின் உண்மையான வருவாய் மற்றும் காட்டப்பட்ட கணக்குகள் இடையே உள்ள வித்தியாசம் ஆயிரம் கோடிகளை தாண்டியது. இதற்கு முக்கிய காரணம் ராமலிங்க ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்தனர். ஹைதராபாத் ரியல் எஸ்டேட்டில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்தார். ஆனால், 2008ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, நிலத்தின் விலைகள் சரிந்தன.

இனியும் நிறுவனத்தின் கணக்குகளில் பொய்கள் சொல்ல முடியாது என்பதால், உண்மை தானாகவே வெளிப்படுவதற்கு முன்பு அதை ஒப்புக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி, "நான் நிறுவனத்தின் கணக்குகளில் பல ஆண்டுகளாக மோசடி செய்து வந்தேன்" என கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து, ஒரே நாளில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை 80% வரை சரிந்தது. முதலீட்டாளர்கள் பலரும், பில்லியன் கணக்கில் இழந்தனர். இதையடுத்து, இந்திய அரசு உடனடியாக நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது.

பிறகு SEBI (இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம்) விசாரணையைத் தொடங்கியது. ராமலிங்க ராஜுவையும், அவரது நெருங்கிய நண்பர்களையும் சிபிஐ கைது செய்தது. இந்த சம்பவம் இந்திய வணிக உலகத்தையே புரட்டிப் போட்டது. இது ஒரு அறையில் நடந்த சிறிய மோசடி அல்ல. இது, உலகமே நம்பிக்கையுடன் பார்த்த ஒரு முன்னணி இந்திய ஐ.டி. நிறுவனத்தில் நடந்த மோசடி சம்பவம்.

இதையடுத்து, அரசின் ஒழுங்குமுறையுடன், சத்யம் பங்குகளை விற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில், Tech Mahindra வென்று சத்யம் நிறுவனத்தை கைப்பற்றியது. சில நாட்களில், "Satyam Computers" என்ற பெயர் "Mahindra Satyam" என மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, நிறுவனம் மெதுவாக வளர்ச்சி அடைந்தது. முன்னாள் வாடிக்கையாளர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் நிறுவனத்தை அணுகினர். பெரும்பாலான ஊழியர்கள் வேலைவிட்டு செல்லாமல் நிறுவனத்திலேயே பணியாற்ற தொடங்கினர்.

இதற்கிடையே, கடந்த 2015ஆம் ஆண்டில் ராமலிங்க ராஜு மீதான மோசடி வழக்கு நடைபெற்றது. இதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இதையடுத்து, ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய மோசடிக்கு இந்த தண்டனை தானா..? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்த விவகாரத்தில் குறிப்பாக, யாரும் கணக்குகளை கேட்கவில்லை. ஆடிட்டர்கள் கணக்குகளை சரிபார்த்ததாக கையெழுத்திட்டுள்ளனர். நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒருமுறை கூட சந்தேகம் எழுப்பவில்லை. இது வெறும் ஒரு நபரின் மோசடி அல்ல. இது ஒரு முழு நிறுவன அமைப்பின் கண்காணிப்பு முறையின் தோல்வியாக பார்க்கப்படுகிறது. நம்பிக்கையின் பெயரில் நடந்த மறைமுகத் தோல்வி தான் இந்த மோசடி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+